Monday, May 28, 2007

கர்னாடக இசை, 100 வயலின், ஒரு வெஸ்டர்ன் பீட்!

மதுரையில் கைவண்டி இழுப்பவர்கள்/மிதிப்பவர்கள் (ரிக்ஷாகாரர்கள்) எல்லாரும் சேர்ந்து, ஒரு கர்னாடக இசைப் பாடகரிடம்,
எங்களுக்காக இதைப் பாடுங்களேன் என்று கேட்டார்கள்.
வியப்பாக உள்ளதா?
குத்திசைப் பாட்டுக்குத் துள்ளாட்டம் போடுவோர், இதற்கும் துள்ளாட்டம் போட்டபடிக் கேட்டு ரசித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி என்ன பாட்டு? யாரிடம் கேட்டார்கள்??
பாட்டு ஒரு வெஸ்டர்ன் பீட்.
கேட்டது மதுரை மணி ஐயர் என்ற புகழ் பெற்ற கலைஞரிடம்.
பொதுவாக இது Madurai Mani Note என்று பிரபலம் ஆகியது.
ஆனாலும் இந்த நோட் அவரே புனைந்தது கிடையாது!

முத்தையா பாகவதர் என்பவர் தாம் அதை உருவாக்கியது.
இருப்பினும் பிரபலப்படுத்தியதால் மதுரை மணி நோட் என்றே ஆகி விட்டது! இதோ நீங்களும் கேளுங்கள் - எதில் வேண்டுமானாலும்!

* SAXOPHONE
** CLARINET
*** VIOLIN
**** GUITAR

* மதுரை மணி அவர்களே பாடுவது
** நித்ய ஸ்ரீ பாடுவது

இதே பாடலை, தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிவாஜி வாசிப்பார்.
ஆங்கிலேயர் ஆடும் நடனப் பார்ட்டியில் கலந்து கொள்ளாது, மக்களுக்காக வெளியில் நின்று நாதசுரம் வாசிப்பார்.
அதில் மயங்கும் வெளிநாட்டுக்காரர்கள், அவர்கள் இசையை நாதசுரத்தில் வாசிக்க முடியுமா என்று கேட்க,
அப்போது இந்த மதுரை மணி நேட்டைத் தான் சிவாஜி வாசிப்பார்.


இப்படிப் பல நாட்டு இசைக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது தான் நம் இசை!
என்ன... இது ஒரு நுண்கலை என்பதால், சற்று புரிந்து கொள்ள முற்பட வேண்டும்!
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை - அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

என்ற குறளைப் போல், அன்பு இருந்தால் ஆர்வம் வந்து விடும்!

முன்பு போல், அதிகமாக இலக்கணம் எல்லாம் பேசாமல், ரசிகர்களைக் கருத்தில் கொண்டும் இப்போதெல்லாம், பல கர்னாடக/தமிழிசைக் கச்சேரிகள் நடக்கின்றன.
சினிமாவிலும் இதன் சாயல்கள் நிறைய வருகின்றன. ராஜா கையாளாத ராகங்களா?
வரும் பதிவுகளில், இது போல் நிறைய இசை ஆர்வம் / இசை உந்துதல் பதிவுகளை எல்லாம் பார்க்கலாம்.
ரசிக்கத் துவங்கி விட்டால், ருசிக்கத் துவங்கி விடலாம்! :-)


சரி, இதை எதற்கு இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
விடயம் இருக்கிறது!
வயதான பின்பு கூட, திடீர் என்று இசையில் ஆசை முளைக்கிறது அல்லவா? எங்கு போய் கற்றுக் கொண்டால், கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லித் தருவார்கள் என்று ஒரு கேள்வி எழும்!

சென்னையில் ஒருவர்... பலதரப்பட்ட வயதினரையும் வைத்துக் கொண்டு, சுமார் 150-200 பேர்.....சிறுவர், பொடியர், பெரியவர் எல்லாரும் தான்...வயலின் கச்சேரிகள் செய்கிறார்.
தனிக் கச்சேரி எதுவும் கிடையாது!
எல்லாமே குழுவோடு இணைந்து ஒரு Ensemble தான்!

அயல்நாட்டு வாத்தியம் வயலின்! இது எப்படி நம் இசைக்குள் வந்தது?
நண்பர் CVR இது பற்றி முன்னரே ஒரு பதிவு போட்டிருந்தார்...
பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க!

ஒரு 100 வயலின்களை ஒரு சேர மீட்டினால் எப்படி இருக்கும்?
அதுவும் அதை வாசிப்பதில் பாதி பேர் பொடிசுகள்!
நீங்களே பாருங்க!
எல்லாரும் மேற் சொன்ன மதுரை மணியின் வெஸ்டர்ன் நோட்டைத் தான் வாசிக்கறாங்க!


சென்னையில், CARVA என்கிற ஒரு அமைப்பு.
CA Rajasekar Violin Academy என்பதே CARVA. அங்கு தான் இந்தப் பயிற்சி!
இதோ அவர்கள் வலைதளம்: http://www.carvatrust.org/

பயிலும் எந்த மாணவரையும் திறமையை வைத்துக் கூட பேதம் பார்ப்பதில்லை!
சீனியர், ஜூனியர் எல்லாரும் ஒன்றாகவே வாசிக்கிறார்கள் இந்த Ensemble-இல்.
மார்கழியில், கூட்டமாக இருக்கும் என்ற காரணத்தால்,
வைகாசி மாதத்தில் எல்லா மாணவர்களுடனும் திருவையாறு சென்று, அங்கே தியாகராஜர் நினைவிடத்தில் இசை அஞ்சலியும் செய்கிறார்கள்!

பீத்தோவன் தீம் இசை ஒன்றையும் வாசிக்கது பாருங்க அந்தக் குழு!


என்ன, இப்ப சொல்லுங்க, இசை இன்பம் தானே?

(Video Courtesy: KS Balachandran, CARVA)

Sunday, May 20, 2007

கணேச கானங்கள்



சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.

ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்ப்டித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன்.


ஆதாலால், வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன்.

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.

பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா.

வாதாபி கணபதிம் - நித்யஸ்ரீ மஹாதேவன்

இந்த பாடலில், தீக்ஷிதர், 'ஹம்சத்வனி ஹே பூஷித ரம்பம்...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!

தமிழில் பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் கணபதி துதிப் பாடலாகும்.

சுதா ரகுநாதன் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:

Get this widget | Share | Track details


ஹம்சத்வனி ராகம் கல்யாணி ராகத்தைப்போல் மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!

கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.

Get this widget | Share | Track details

'காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ' பாடலில் ஒரு வரி வரும்... 'இசையின் பயனே இறைவன் தானே' என்று. இசையின் பயன் மட்டுமல்ல.. இசையே அவன் அருளால்தான்!

Tuesday, May 08, 2007

சினிமா காரம் "காப்பி" - பாகம் 2

அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே (டேய்!!! அடங்குடா!! )
சரி சரி!!!

அன்பார்ந்த வலையுலக நண்பர்களே (ஹ்ம்ம் !! அது!!)
போன பகுதியை பார்த்து,படித்து,பின்னூட்டங்கள் இட்ட அனைத்து அன்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
போன பகுதிக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த பின்பு உங்களிடம் இந்த தலைப்பின் மேல் உள்ள ஆர்வமும்,அறிவும் கண்டுகொண்டேன். பல பேர் தனக்கு தெரிந்த இதர காபிகளையும், இன்ஸ்பிரேஷன் மற்றும் காபியில் உள்ள வேறுபாடு பற்றி தனக்கு தெரிந்த தெளிவான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பெயர் என்னமோ காப்பின்னு வெச்சாலும் கூட போன தடவை பார்த்த உதாரணங்கள் எல்லாம் இன்ஸ்பிரேஷன் வகையை சார்ந்ததே தவிர,அவற்றை முழுமையான காபி என்று சொல்ல முடியாது. ஆனால் அது போன்ற ஈயடிச்சான் காபி வகையை சேர்ந்த சில பாடல்களை இந்த பகுதியில் காணலாம்.

S.A.ராஜ்குமார் :
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தமிழ் திரையுலகில் அமைதியாய் நுழைந்தவர் S.A.ராஜ்குமார். எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கிறது,படத்தில் ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என விமர்சனங்கள் இருந்தாலும் அமைதியான,ஆரவாரம் இல்லாத மெல்லிய பாடல்களை சத்தமில்லாமல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.(இந்த பதிவில் அவரின் ஒரு பாடலின் சுட்டியை தருவதற்கு பதிலாக,அதே படத்தின் இன்னொரு பாடலின் சுட்டியை முதலில் போட்டுவிட்டேன்!! அந்த அளவுக்கு அவரின் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கும்!! :-))

காபி அடிப்பதில் ஜாம்பவான்கள் சிலரின் (ஒருவரின்?!) மேலேயே மக்களின் கவனம் இருந்ததால்,இவரின் இசையில் காபிகள் உள்ளனவா என்பதை பற்றி எல்லாம் மக்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை. ஆனால் இவரின் மேல் உள்ள என் மதிப்பை புரட்டி போட்ட படம் "வானத்தை போலே". இந்த படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றன ஆனால் என் கவனத்தை பெற்ற ஒரு பாடல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" எனும் பாடல்.

ஏன் என்று கேட்கிறீர்களா ?? ஏன் என்றால்,இது "Daag - the fire" எனப்படும் இந்தி திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் அச்சு அசல் காபி. இதை கேட்ட பின் அட பாவிகளா தேவா மட்டும் தான் இப்படி என்றால் அவருக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டாரே என்று நினைத்துக்கொண்டேன்.
இது கூட பரவாயில்லை ஆனால் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு.
என்னது??? பாகிஸ்தானா??? ஏன் காபி அடிக்க வேறு பாடலா கிடைக்கவில்லையா?? என்று தோன்றுகிறதா?

பாகிஸ்தானில் "ஜுனூன்" என்று ஒரு இசைக்குழு உண்டு. இவங்களுக்கும் நம்ம ஊருல மெகா சீரியல்களின் அட்டகாசங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்கன்னா,நீங்க பாட்டுக்கு எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோன்னு யோசிக்க ஆரம்பிச்சுராதீங்க!! :-)
அவர்களின் பாடல்கள் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் பெறும் புகழ் பெற்றவை. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகள் நடந்த சமயத்தில் அவர்கள் இந்தியா வந்து மேடை கச்சேரிகள் செய்த கதைகள் எல்லாம் உண்டு.

அந்த குழுவின் "சய்யோனி" எனும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது!! சூஃபி இசை ரகத்தில் மேற்கத்திய இசையை அழகாக கலந்து ஒரு விதமான சோகத்தின் ஊடேயும் விறுவிறுப்பான மன நிலையை அளிக்கவல்ல அருமையான பாடல் அது. இசைக்கு மயங்காதோர் எவரும் உண்டோ என்பது போல் பாகிஸ்தானிய இசை திறமை பற்றி எனக்கு அறிமுகப்படுத்திய அழகான பாடல் அது. அருமையாக படப்பிடிப்பும் செய்யப்பட்டிருந்ததால் அந்த பாட்டு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. (நடுவில் வரும் கிதார் அலாபனை அற்புதம்!! :-))

சிறிதே தமிழ் திரை இசை பாணியில் மாற்றப்பட்டது போல் தெரிந்தாலும் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் வரும் "மேகமாய் வந்து போகிறேன்" எனும் பாடலில் ஈயடிச்சான் காபி அடித்திருப்பார் S.A.ராஜ்குமார்
நீங்களே கேட்டு பாருங்களேன்!! :-)

S.A.ராஜ்குமார் "மேகமாய் வந்து போகிறேன்" : படம் "துள்ளாத மனமும் துள்ளும்"




Sayonee - Junoon




இதில் இன்னொரு தமாஷ் என்னவென்றால் இதே பாட்டை நம்ம தேவா சார் தனக்கே உரிய பாணியில் இன்னொரு முறை காபி அடித்திருப்பார்.
"கண்ணெதிரே தோன்றினாள்" எனும் திரைபடத்தில் வரும் "சலோமியா"
எனும் பாடலில் தான் இந்த கூத்து நடந்திருக்கும்!! :-)
தேவாவா கொக்கா?? :P


ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!
இப்பவே கண்ணை கட்டுதே,இதுக்கு மேல எழுதினா இந்த பதிவு தாங்காது. அடுத்து தேவாவை பற்றி வேற எழுத போறேன். அதனால அதை தனி பதிவாத்தான் ஆரம்பிச்சாகனும்!!!
அடுத்த காபி பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து நன்றியுடன் விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!

வரட்டா?? :-)

Sunday, May 06, 2007

சினிமா காரம் "காப்பி" - பாகம் 1

என் இனிய தமிழ் மக்களே!!
அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக்கிட்டு (இல்ல பிடுங்கறா மாதிரி நடிச்சிக்கிட்டு) எல்லோரும் ரொம்ப சோர்வா இருப்பீங்க. இந்த சோர்வுக்கு இளைப்பார ஒரு காபி குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?? உங்களுக்கு எல்லாம் காபி தரலாம்னு எனக்கும் ஆசைதான் ,ஆனா தொழில்நுட்பம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை,நான் என்ன பண்றது :-(
சரி காபி தான் கொடுக்க மாட்டேங்குற ,காபி ராகம் பத்திய பதிவா இது அப்படின்னு கேக்கறீங்களா??
சிந்து பைரவி பட பாட்டுல வரா மாதிரி நாமலும் "என்னமோ ராகம்,என்னென்னமோ தாளம்,தலைய ஆட்டும் புரியாத கூட்டம்" தான்,அதனால நீங்க பயப்படாதீங்க.

நம்ம தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர்கள் செய்யும் காபிகள் பத்தி தான் இந்த பதிவு.
காபி அடிக்கரதுலையே பலவிதங்கள் இருக்குங்க!! நாம அன்றாடம் பல பேர்களை பார்க்கிறோம்,பல விஷயங்களை கேட்கிறோம்,படிக்கிறோம். இவற்றின் பாதிப்பு நாம் செய்யும் பல செயல்களில் நம்மையும் அறியாமல் புகுந்து விடுவது தவிர்க்கமுடியாதது. அதுவும் பெரும் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் என்றால் நிலைமை ரொம்ப கஷ்டம். தங்கள் துறையில் அவ்வப்போது வெளிவரும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக பல வகை இசை தொகுப்புகளை கேட்பது எந்த ஒரு இசை அமைப்பாளரும் செய்யும் விஷயம்.

பல படங்களில் ஒப்பந்தமாகி தயாரிப்பாளரும்,இயக்குனரும் எனக்கு இந்த மாதிரி இசை வேண்டும்,அந்த மாதிரி மெட்டு வேண்டும் என்று நெருக்குதல் தரும் போது முன் எப்போவோ கேட்ட பாதிப்பில் இசை அமைப்பது புரிந்துக்கொள்ள கூடியது தான். ஆங்கிலத்தில் இந்த் விதமான இசை அமைப்புகளை "Inspired" என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இசைகளை அமைப்பதிலும் திறமையும் உழைப்பும் தேவை என்பதால் இதை கூட மன்னிச்சு விட்டு விடலாம். ஆனால் சில பேர் ஈயடிச்சான் காபி அடிப்பார்கள் பாருங்கள். அதை தான் பொருத்துக்கொள்ளவே முடியாது.அதுவும் சில பேர் அப்படி காபியும் அடித்து விட்டு அதை தான் மிக கஷ்டப்பட்டு உருவாக்கியது போல் பேசும் போது எரிச்சலாக வரும். இன்னும் சில பேர் இருப்பதையும் கேவலப்படுத்துவதை போல் சொதப்பிவிடுவார்கள் பாருங்கள்,அதையெல்லாம் என்னவென்று சொல்ல??

இந்த பதிவில் நமக்கு தெரிந்த சில காபிகள் பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.


எம்.எஸ்,விஸ்வனாதன்:

தமிழ் திரையுலகில் மெல்லிசை என்றால் என்ன என்பதை எல்லோருக்கும் அறிமுகபடுத்தியவர்களே மெல்லிசை மன்னர்களான விஸ்வனாதன் ராமமூர்த்தி தான். அதற்கு முன் இருந்த திரை இசை பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தையே சார்ந்திருந்தது. இப்பொழுது பெரிதும் பேசப்படும் கலந்திசை (fusion music) இன் முன்னோடிகள் அவர்கள்தான். மேற்கத்திய இசை பாணிகளை லகுவாக இந்திய இசையுடன் கலந்து இனிமையான பாடல்களை நமது செவிகளுக்கு விருந்தாக படைத்தவர்கள். அவர்கள் படைத்த பல பாடல்கள் காலத்தை கடந்து நம் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.

எம்.எஸ்.விஸ்வனாதன் இசை அமைப்பில் எனக்கு பல பாடல்கள் பிடித்திருந்தாலும் எனக்கு பெரிதும் பிடித்த ஒரு பாடல் "புதிய பறவை" படத்தில் வரும் "பார்த்த நியாபகம் இல்லையோ" என்கிற பாடல். அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் அப்படியே உருகி விடுவேன். ஒரு விதமான "mystic" உணர்வை வெகு அழகாக வெளி கொணர்ந்திருப்பார் இசை அமைப்பாளர். பாடலை பாடிய விதமும்,அதை படம் பிடித்திருக்கும் விதமும் வெகு அற்புதமாக அமைந்திருக்கும்.
அனால் இந்த பாடலில் "SwayWithMe-DeanMartin" என்ற மேற்கத்திய பாட்டு ஒன்றின் சாயல் இருப்பதை சமீபத்தில் அறிந்தேன். "inspired" என்ற சொல்லுக்கு மிக அற்புதமான சான்றாக இந்த பாடலை கொள்ளலாம். கர்நாடக இசையோடு மேற்கத்திய இசையை கலந்து பரிசோதனை நடந்து வந்த காலத்தில் இப்படிப்பட்ட சாயல்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். மக்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்க வேண்டும் என்ற இசை அமைப்பாளரின் எண்ணத்தை பாராட்டத்தோன்றுகிறதே தவிர,இதை குறை கூற தோன்ற வில்லை.
இது ஒன்றும் அச்சு அசலாக காபி அடிக்கப்பட்ட பாட்டு இல்லை என்றாலும் இசை பாதிப்புகள் என்பது எல்லா நேரங்களிலும் நடந்திருக்கிறது,இது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல என்பதை விளக்கவே இந்த பாடலை இந்த பதிவில் சேர்த்திருக்கிறேன். ஆனால் இந்த பாடலை முதலில் கேட்டால் இது காபி என்று கூட சொல்ல முடியாது,உன்னிப்பாக கேட்டால் தான் இதன் பாதிப்பை புரிந்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இதை மிக நேர்த்தியாக மற்றி இருக்கிறார் இசை அமைப்பாளர்.குறிப்பாக 1:40 நிமிடத்தில் வரும் இசை சிறிது காட்டிகொடுக்கலாம். :-)

எம்.எஸ்.விசுவனாதன் "பார்த்த நியாபம் இல்லையோ" : படம் "புதிய பறவை"

PaarthaNyabagam-Pu...




SwayWithMe-DeanMartin

SwayWithMe-DeanMar...




இசைஞானி இளையராஜா:
மெல்லிசை என்னவென்று சொன்னவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றால் தமிழ் திரை இசையில் மெல்லிசையை அரியாசனம் போட்டு நீங்காத இடம் பிடிக்கச்செய்தவர் இசைஞானி இளையராஜா என்று சொல்லலாம். இவரை பற்றி சொல்ல கொஞ்ச நஞ்சம் கிடையாது,தமிழ் திரை இசை இப்போது இருக்கும் நிலைக்கு ஒரு "Godfather" ஆக திகழ்பவர் இளையராஜா அவர்கள்.இவரின் இசையிலும் "inspired" ரகங்களே உண்டே தவிர ஈயடிச்சான் காபி இருக்காது. உன்னிப்பாக கேட்டாலே ஒழிய இவரின் பாடல்களிலும் பாதிப்புகளை உணர முடியாது.
"ஒரு கைதியின் டைரி" படத்தில் "ABC நீ வாசி" என்று ஒரு பாடல். மிக அழகான மெல்லிசை. காதலர்களின் குறும்பும்,ஊடலும்,பொய்க்கோப பூக்களும் அழகாக கொப்பளிக்கும் இந்த பாடலில்.
இந்த பாடல் ஒரு பிரென்சு சிம்பனி இசையின் பாதிப்பில் அமைந்ததாக ஒரு கருத்து உண்டு. பாடலை கேட்டு நீங்களே சொல்லுங்களேன்!! :-)

இசைஞானி இளையராஜா "ABC நீ வாசி" : படம் "ஒரு கைதியின் டைரி"

ABC-OruKaidhiyinDi...



L'Arlésienne Suite No.1-Carillon

Carillon-GeorgesBi...


பி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வாழ்விலே" பாடலின் நடுவில் வரும் இசையும் "மூன்றாம் பிறை" படத்தில் "பூங்காற்று புதிரானது" பாடலின் நடுவில் வரும் இசையும் (ஸ்ரீதேவி ரயில் தடத்தில் மாட்டிகொள்லும் காட்சியில் வரும் இசை) ஒரே மாதிரி இருக்கும். இப்படி அச்சு அசலாக ஏன் இளையராஜா இசை அமைத்தார் என்று நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு.


ஏ.ஆர்.ரகுமான்:

தமிழ் திரை இசையை நாடு முழுக்க கேட்க வைத்த இசை அமைப்பாளர்.தமிழ் திரை பாடல்களை உலகம் முழுதும் கவனிக்க வைத்தவர் என்றால் அது மிகையாகாது. இந்திய இசையில் மேற்கத்திய இசையை பெரிதும் புகுத்தி புரட்சி செயதவர்.நிறைய புதுப்புது விஷயங்களாய் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற துடிப்பினால் இவரிடமும் வெளிநாட்டு இசையின் பாதிப்புகளை பார்க்கலாம். இவரின் பாடல்கள் சிலவற்றில் தாளங்கள் (beats) முழுவதுமாக வெளிநாட்டு இசையிலிருந்து சுட்டவையாக இருக்க பார்க்கிறோம்.உதாரணத்திற்கு "அக்கடான்னு நாங்க உடை போட்டா",படம்
: இந்தியன் (Love of common people), "தென்மேற்கு பருவ காற்று",படம் : கருத்தம்மா ( Om we rembwe ike0). ஆனால் பாடலின் மெட்டுக்கள் எனக்கு தெரிந்த வரை சொந்த சரக்காகத்தான் இருக்கும்.

இந்தியன் படம் மிக அருமையான பாடல்கள் பலவற்றை கொண்ட படம். அதில் 'டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா??" எனறொரு பாடல். ஆஸ்திரேலியாவில் மிக அழகாக படமாக்கப்பட்ட பாடல்,இந்த பாடலில் "Ace of the base:All that she wants" என்ற ஒரு ஆங்கில பாட்டின் தாக்கம் உள்ளது என்று என் நண்பன் சொன்ன போது நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பொழுதெல்லாம் எனக்கு ரகுமான் இசை என்றால் ஒரு பைத்தியம்,அதனால் பிடிவாதமாக நம்ப மறுத்தேன். பிறகு அந்த பாடலை கேட்ட பின் தான் புரிந்தது.

நீங்களும் கேட்டு பாருங்களேன்,பாடல் நன்றாகத்தான் இருக்கும். பாடலை முழுவதுமாக கேட்க பொறுமை இல்லை என்றால் ஆங்கில பாட்டில் குறிப்பாக 2:14 நிமிடத்தில் இருந்து கேட்டு பாருங்கள்!! :-)

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் "டெலிஃபோன் மணி போல்" : படம் :"இந்தியன்"

Ace of the base : All that she wants

---காபிகள் தொடரும்

நன்றி : http://www.itwofs.com/

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP