அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!
ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.
என்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.
அதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.
அத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.
அவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.
பெயரைச் சொல்லிப் பார்த்தாலே,
நாவில் தேன் சொட்டி,
ஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.
ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,
உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.
"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?
நீ லவ் பண்ற ஆண்ட்டியா?"
வெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,
அப்போதுதான் உறைத்தது.
அந்த சமயம், "சின்னக் குஷ்பூ" என்றழைக்கப்பட்ட, "சிவரஞ்சனி" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.
இது அவரல்ல என்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
சரி! என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
மொத்தம் ஐந்தே ஸ்வரங்கள்தான்.
//ஷட்ஜமம், "ஸ"
சதுஸ்ருதி ரிஷபம், "ரி1"
சாதாரண காந்தாரம், "க"
பஞ்சமம், "ப"
சதுஸ்ருதி தைவதம். "த"//
ஸ, ரி, க, ப, த, ஸ
ஸ, த, ப, க, ரி, ஸ
சோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.
முன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.
ஐயோ! அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....
சர்வாலங்காரத்துடன், ஜெக, ஜெகவென்று....
கண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...
என்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.
என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.
நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.
சந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,
என்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.
இப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...
ஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா
கேட்டார்.
"என்னப்பா! 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு?"
அவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.
ஆம்....
என்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.
அதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.
பி. சுசீலாவின் குரலில்...
ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.
கேட்டுப் பாருங்கள்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அடுத்தது "நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்."
எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது
அம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அடுத்து, "மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை"
பாடலும் அப்படியே...
அவளுடைய தனித்தன்மையே இதுதான்.
தார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,
மந்திர அதி மந்திர என்று வெகு வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.
அப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
அதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.
அப்போது, "சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்," வெளிப்படும் பாருங்கள்...
|
பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்
இசைஞானி இளையராஜா இசையமைத்த "என் ராசாவின் மனசிலே" படத்தில் "குயில் பாட்டு" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.
அதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.
ஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.
இவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம்.
குயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.
அதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.
ஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.
நினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.
இத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...
இல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...
சில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு...
அவளுடன் பேசாதிருந்தேன்.
தொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...
இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.
பார்க்கலாம்.