Showing posts with label tamizh isai. Show all posts
Showing posts with label tamizh isai. Show all posts

Tuesday, December 30, 2008

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

Saturday, December 27, 2008

தமிழிசை வரலாறு - 4 - திருவாசகமும் திருப்புகழும்

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

Thursday, December 25, 2008

தமிழிசை வரலாறு - 3 : பிரபந்தம் & கம்பன்

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை

நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.



அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:



ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)

Monday, December 22, 2008

தமிழிசை வரலாறு - 2 : தேவாரம்

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Sunday, December 21, 2008

தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;





சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

Tuesday, December 16, 2008

தமிழிசைப் பாவலர் பலர்!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

Sunday, October 12, 2008

தமிழ் மூவர்

மிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் தமிழ் மூவர் பற்றி இங்கே பார்க்கவிருக்கிறோம்.
'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். (இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழ் நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.) தமிழில் கிருதிகளை உருவாக்கிய முன்னோடிகளான இவர்களின் தமிழிசைத் தொண்டு அளவிடற்கரியது.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஈசனே கோடி சூரிய பிரகாசனே - நளினகாந்தி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - மாயாமாளவகௌளை

'ஆடிக்கொண்டார்' பாடலை இங்கு, திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:
MusicIndiaOnline தளச் சுட்டி இங்கே.

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
தரிசித்தளவில் - லதாங்கி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

ருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:

  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

Friday, July 11, 2008

உளியின் ஓசை - ராஜாவின் ஓசை

இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் 'உளியின் ஓசை' படத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் துவக்கத்தில் இளையராஜா, கவிதை நடையில் என்ன சொல்லுகிறார்?

நான் ஒரு சிற்பி, நடனக்கலை தெரிய தேவையில்லை.
இருப்பினும் உனக்கதை விளக்கிடவே...

முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரியாவிரை, யாழ்நூல், பஞ்சமரபு
இவை இசை கூறும்.

செயிற்றியம், கூத்தநூல்
நடன கலை வகை கூறும்.

பல தொன்நூல்கள் கூறும்
தோற்கருவி, முழவு, முரசு, உடுக்கை,
மிருதங்க தாள மேளம் ஆகும்.

துளைக்கருவி, புல்லாங்குழலொடு,
மரக்கிளை ஒடித்து மனைத்து சீவாளி பொருந்தும் முகவீணை,
திமிரி நாயனம் நாதஸ்வரமாகும்.
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்,
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்,
சாரங்கியொடு
என்றும் நிறை வீணையாகும்.

மிடற்றுக்கருவி குரல் ஆகும்,
பண்பட்டு பண்பாடும் குரல் வகையாகும்.

இத்தனையும் ஒருங்கிணைந்து
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
ஏழிசை எழும்ப தாளம் தவறாமல், இசைந்தாடும் நடனக் கலைதனில்
எத்தனை பாவமுண்டு நடனத்திலே!!!

குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இராகம்: மாயாமாளவகௌளை & (???நீங்களே சொல்லுங்க!)
பாவாசிரியர்: நா.முத்துலிங்கம்

அகந்தையில்...


"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே"

- கூத்த நூல்

இசை நூல்கள், இசைக் கருவிகள் பெயரெல்லாம் வருவது போலுளதே? எத்தனையோ காலம் முன்னரே நம் மரபில் திளைத்திட்ட இந்த இசை நயங்களை, இப்போது நினைவில் திருப்பிட, இவையெல்லாம் என்னவென்று விளக்கும் சுட்டிகளையும் இயன்றவரை இணைத்திருக்கிறேன்:

* தமிழ்ச்சங்கங்கள்
* இசைத்தமிழ்
* சுவாமி விபுலானந்தர் - யாழ்நூல்
* நாடகத்தமிழ்
* முரசும் அரசும்
* ஒரு நாகசுரம் உருவாகிறது
* துளைக்கருவிகள்
* விக்கியில் யாழ்
* இசை இன்பம் - சாரங்கி
* வைகோ இசை உரை
* விக்கியில் பஞ்சமரபு
* இசையின் கருவரைகள்

Thursday, October 18, 2007

தமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா?(உன் தயவில்லையா)?

எனக்கு இசை ரொம்ப பிடிக்கும்!
தமிழில் இசையோ ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
தனிமையில் என்னைப் பிடியாய்ப் பிடிக்கும்!
தவிக்கும் உள்ளத்தில் செடியாய் முளைக்கும்!

நியுயார்க் நகரத்தை ஒட்டினாப் போல இருக்கும் ஆறு, ஹட்சன் ஆறு!
இன்று அலுவலகத்தில் ஒரு நீண்ட.....நெடிய......மீட்டீங்....முடிந்த பின்னர், அடப் போங்கடா... கொஞ்சம் புதுக் காற்றையாச்சும் சுவாசிக்கலாமே என்ற எண்ணம் வந்துச்சு!
அதனால் ஆத்தோரமா காலாற நடந்து கொண்டிருந்தேன். உடனே "ஆத்தா, ஆத்தோரமா போறியா" ன்னு பாட்டை எல்லாம் எடுத்து வுடாதீங்க! :-)

குளிரும் அவ்வளவா இல்லை! வெயிலும், காற்றும் மிதமாய் வீசின!
என் mp3 ப்ளேயரில் அப்ப தான் ஏதோ ஒரு பாட்டு முடிஞ்சு, திடீரென்று ஒரு உருக்கமான பாட்டு துவங்கியது! - "நீ தய ராதா"?

சிந்து பைரவி படத்தில், நம்ம சிந்து, இந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் ஜேகேபி-கிட்டே மொழி மாத்தி, தமிழில் பாடிக் காட்டுவாய்ங்க! அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு! :-))

ஆகா...இது நான் விரும்பிக் கேட்கும் ஜேசுதாஸ் பாட்டாச்சே! கொஞ்ச நேரம் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டேன்!
பொருள் லேசாகத் தெரிஞ்சாப் போலத் தான் இருந்திச்சு! ஆனா அதை விட, சூழ்நிலைக்கு அந்தப் பாட்டு ரொம்ப பொருத்தமாய், இதமாய் இருந்துச்சு!

ஏன்னா, நெருங்கிய நண்பருடன் சண்டை! ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை! சாட்டவும் இல்லை! நடுவில் ஒரு முறை அழைத்துப் பார்த்த போது, நண்பர் கொஞ்சமும் கோபம் தணியாமல் (இல்லையில்லை...ஒரு விதமான செல்லமான உரிமையில்....), தொலைபேசியை கட் பண்ணி விட்டார்! :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம்? - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே! போதும்-டா, நிறுத்திக்கோன்னு! சொல்லலாம்!

ஆனா தியாகராஜர் வேற மாதிரி சொல்லுறாரு!
ஸ்ரீராமனே! உனக்குத் தயவே இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ? அப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு!
மன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, தலையில் ஒரே தட்டா தட்டறாரு!:-)



இந்தப் பாட்டை நம் கொஞ்சு தமிழில் கேட்டா எப்படி இருக்கும்-னு உடனே தோணிச்சி!
அமெரிக்கா வந்த புதுசுல, பொழுது போகாம, இது போல ஏற்கனவே சில பிரபலமான கீர்த்தனைகளை, சும்மானாங்காட்டியும் தமிழில் ஆக்கி வைச்சிருந்தேன்!
ஒலிப்பேழையில் ஜேசுதாஸ் பாடப்பாட, நானும் அவர் கூடவே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே நடந்து கொண்டிருந்தேன்!

ஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க!
நான் தான் இசையின் போதையில் இருந்தேனே! பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை!

தெலுங்குப் பாட்டையும், தமிழ் ஆக்கத்தையும் கீழே கொடுத்திருக்கேன்! பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
தமிழில் ஆக்கும் போது, அதே ராகமும் மெட்டும் அப்படியே வரவேண்டி இருக்கு; அதனால் தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே சற்று மாற்றி அமைக்க வேண்டி இருக்கு!
தியாகராஜரின் தெலுங்கோ, மக்களின் பேச்சுத் தெலுங்கு! அதனால் தமிழ் செய்யும் போது, அதே எளிமை வந்தா தான் இன்னும் நல்லா இருக்கும்!

இதோ...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிச்சீங்கன்னா, தியாகராஜர் என்ற இசைக் கடலின் சுவையில் நீங்களும் கிறங்கிப் போயிடுவீங்க!
உங்களுக்கு எது விருப்பமோ, அதைக் க்ளிக்கி கேளுங்க!.....நான் விரும்பியது நித்யஸ்ரீ மற்றும் சுசீலாம்மா பாடுவது...
* சிந்து பைரவி-யில் ஜேசுதாஸ் பாடுவது
** சுசீலாம்மா, ஒரு தெலுங்கு படத்தில், கொஞ்சம் ஜனரஞ்சகமாப் பாடுவது

* நித்யஸ்ரீ பாடுவது
** N.C. வசந்த கோகிலம் பாடுவது
*** வீணையில், காருக்குறிச்சி சகோதரர்கள்

ராகம்: வசந்த பைரவி
தாளம்: ரூபக தாளம்
பாடல்: நீ தய ராதா
வரிகள்: தியாகராஜர்


பல்லவி
(நீ தய ராதா...ராமா...நீ தய ராதா)
உன் தயவில்லையா?...ராமா...உன் தயவில்லையா?

அனுபல்லவி
(காதென வாரு எவரு...கல்யாண ராமா)
தடுப்பது யார் எவரோ?...கல்யாண ராமா...!!

சரணங்கள்
(முதல் இரண்டு பத்திகள் அவ்வளவா யாரும் பாடுவதில்லை...அதனால படிச்சிட்டு, ஸ்கிப் பண்ணிடுங்க...ஆனா பி.சுசீலா மட்டும் முழுவதுமே பாடுறாங்க...)

(நன்னு ப்ரோ-சுவர் இலனு நாடே தெலிய
இன வம்ச திலகா நீக்கு இந்த தாமசமா)

காப்பவர் யாருமிலை என்று, முன்பே தெளிந்தனனே!
கதிரவ குல திலகா, இனியும் உனக்குத் தாமதமா?


(அன்னித்திக்கு அதிகாரி வாநீ - நீனு பொக டித்தே
மன்னிஞ் சிதே நீது மகிமக்கு தக்கு வா)
அனைத்தும் நின் பொறுப்பே - உன்றன் கண்ணியம் குறைபடுமோ?
மன்னித்து அருளாயோ - உன்றன் மகிமையும் குறைபடுமோ?

(ராம ராம ராம தியாக ராஜ ஹ்ருத் சதனா
நாமதி தள்ளதில்லகா நியாயமா வேகமே)

ராம ராம ராம, தியாக - ராஜ மன வாழ்வே
என்மதி தள்ளாடக் கண்டும், நியாயமா? வா வேகமா(ய்)!

இது போல வேறு சில கீர்த்தனைகளையும் அவ்வப்போது இசை இன்பத்தில் அதே மெட்டு வராப்போலக் கொடுக்கலாம்-னு எண்ணம்! இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம்! தியாகராஜரின் முன்னால் அடியேன் முயற்சி வெறும் கால் தூசி தான்!

உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை! - இசையை மட்டும் ஹம் பண்ணி லயித்து விடலாம்!
பாட்டை, வீணையிலோ வயலினிலோ கேட்கும் போது, மொழி வந்து முன்னே நிற்கிறதா என்ன?

ஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,
மனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா?
பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது!வீணையிலோ வயலினிலோ ஒலியாய் கேட்கும் போது கூட, உணர்ந்து உணர்ந்து, கூடவே பாடுகிறது!

பாருங்க...இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது கூட, உன் தயவில்லையா-ன்னு பாடிக்கிட்டே தான் இருக்கேன்! அப்போ நீங்களும் ஹம் பண்ணத் துவங்கியாச்சா?
நீ தய ராதா...ராமா...நீ தய ராதா!

Friday, September 07, 2007

நறுமுகையே நறுமுகையே - நளினா நீ கொஞ்சம் நில்லாய்!

மிக மிகப் பழங்காலத் தமிழ்; சங்க இலக்கியப் பாடல்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா? ஆடியன்ஸ் கல்லெறிவார்களே!
சரி, அதை சுரங்களோடு கர்நாடக மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!

டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி. காலேஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாரும் இந்த ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா.
சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு!
இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு அவிங்க ரொம்பவே மரியாதை காட்டுனானுங்கப்பா!

எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தானாம்!
அப்படி என்னடா மச்சி இந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
வரிகளா? இசையா? குரலா? எதுடா, எது? எது?
உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு தானே!
இருவர் படத்தில், ரஹ்மான் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

என்னாது ரகுமானா? பொதுவா இந்த மாதிரி கர்நாடிக் மெட்டு எல்லாம் நம்ம மொட்டை தானடா கலக்குவாரு!
நல்லாத் தெரியுமா? இசை ஞானி இளையராஜாவா இருக்கப் போவுது!
ச்சே ச்சே! நிச்சயமா ரகுமான் தாண்டா!
ராஜா இதுல பெரிய பிஸ்து தான். ஆனா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா ரகுமான் கொடுத்த கர்நாடிக் மாஸ்டர் பீசுல இதுவும் ஒன்னுடா!



ஆமாண்டா மாப்ள, எழுதியவரு யாரு? - நம்ம கவியரசர் வைரமுத்து தானே!
அதுல என்னடா சந்தேகம்! அவரே தான்!
சும்மாவே அமீபா, நோக்கியான்னு இங்கலீஷ் வார்த்தைகளை நேச்சுரலா தமிழோட கலந்து அடிப்பாரு! அவருக்குத் தூய தமிழ்ல இப்படிப் பாட்டு போடக் கசக்குமா என்ன?
இதுல வர சில வரிகளைச் சங்கத் தமிழ் பாட்டுல இருந்து அப்படியே வரி மாத்தாம கொடுத்திருக்காருடா!

அதுவும் "யாயும் யாயும் யார் ஆகியரோ - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று வருது பாரு!
அது...குறுந்தொகை-ன்னு ஒரு பழம் பெரும் இலக்கியப் பாட்டுல இருந்து எடுத்துக்கிட்டாரு மனுசன்.
அதை எழுதனவரு பேரே செம்புலப்பெயனீரார்-னு சொல்லுவாங்களாம்!

ஹூம்...லேசா ஞாபகம் வருதுடா! இதே பாட்டைத் தான் நான் சாய்ஸ்-ல வுட்டேன் ப்ளஸ்டூ-ல!
ஹூம்...நேரம் பாத்தியா! அப்ப "சாய்ஸ்" ல வுட்ட!
இப்ப, பெப்சி உங்கள் "சாய்ஸ்"-ல அதையே கேட்டு கேட்டு வாங்கற!


பாடறவன் இருக்கானே, அவனும் ஒன்னும் சும்மா இல்லடா! உன்னி கிருஷ்ணன்! சொல்லவே வேணாம் - மெலடி மன்னன்.
அவன் கண்டி நம்ம காலேஜ்-ல இப்ப படிச்சான்னு வையி...ஒரு பிகரு நம்மள பாக்காதுங்க!
அது என்னமோ கரெக்டு தான்டா! குரலுக்குக் குரல், கொஞ்சும் குரல் வேற! சொல்லணுமா நம்ம பொண்ணுங்களுக்கு!
கூடப் பாடினது பாம்பே ஜெயஸ்ரீ. அந்த அம்மா கொஞ்சம் அடர்த்தியா பாடுவாய்ங்க! இதுல நல்லாத் தான் குழைஞ்சு பாடி இருக்காங்க!

சரி, அது என்னமோ ஒரு ராகம் சொன்னியே! இன்னாது - சூரிய காந்தியா?
டேய் டொக்கு! அது சூரிய காந்தியும் இல்ல, இந்திரா காந்தியும் இல்ல! அது பேரு நளின காந்தி டா! அந்த ராகத்துல தான் இந்தப் பாட்டைப் போட்டிருக்காங்க!

ஒங்க கொக்கா மக்க! ஒனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? பாட்டு க்ளாஸ் பத்மா டீச்சரைக் கணக்கு பண்றியே, அந்த எக்ஸ்பெரீயன்ஸா?
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
சரி வா, நாம பாட்டைப் பார்க்கலாம்! ராகம், போகத்துக்கெல்லாம் அப்பறம் வரலாம்!

பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்க, இங்கே!
பாடலைப் பொருளோடு அனுபவித்துக் கேட்கும் போது, ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது. அதான் சற்றே கடினமான சொற்களுக்கு மட்டும் விளக்கம். மத்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
(முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு;
என்ன அரும்பு? மல்லிகையோ, இருவாட்சியோ...காதலர்களுக்குத் தான் தெரியும்!
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள் என்பது கணக்கு.

செங்கனி ஊறிய வாயா? - அது எப்படி கனி ஊறியதுன்னு தெரியும்? என்ன கனி? முக்கனியா?
அடப் போங்க, நான் சொல்ல மாட்டேன். ஒரே வெட்கமா இருக்கு :-)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)
(அற்றைத் திங்கள் = அந்த மாதம்;
தரளம்=முத்து; நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய;
பொய்கை=குளம்; கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

(புரவி=குதிரை)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)


மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன!
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன!
(பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்; பார்த்தவுடனே சொல்லிடலாம் இது காதல் தான் என்று!
இப்பவெல்லாம் இந்தப் பசலை யாருக்காச்சும் வருதா தெரியலையே! நீங்க யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா? :-)
ஒரு வேளை இந்தக் காலத்தில் பொண்ணுங்களை விட்டுவிட்டு, பசங்களுக்கு மட்டும் தான் பசலை வருதா என்ன? :-)


நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை

(நறுமுகையே நறுமுகையே)

(மேகலை = ஒட்டியாணம் போன்ற ஆபரணம். பெண்கள் இடுப்பில் அணிவது; ஏழு அல்லது எட்டுக் கோர்வை இருக்கும். இழுத்துக் கட்டலாம் ஒரு பெல்ட் போல; இடையில் மேகலையை இறுக்கிக் கட்டக் கூட முடியாத அளவுக்கு அவள் மெலிந்து போய் விட்டாளோ!)

யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?

(யாய்=தாய்; எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் )

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன!

(செம்புலம்=செம்மண் பூமி; செம்மண்ணில் சேர்ந்த நீர் போல ஒன்னா மிக்ஸ் ஆனது நம்ம காதல்!)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா



படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து


இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறுந்தொகை, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதாண்டா பொருள்!

சூப்பர்டா மச்சி! பாட்டுக்குப் பொருளை, இந்த மாதிரியே எக்ஸாம்-ல எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :-)
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவுன்னு பாட்டு வருமே, அதுல கூட
"செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் கூட இதே பொருள்-ல பாடியிருக்காருடா!

டேய், போதும் போதும்! ஒத்துக்கறேன்!
ஒனக்குக் கூட கொஞ்சம் இசை ஞானம் இருக்குடா மச்சி!
இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?


நளின காந்தி என்பது அருமையான ராகம். பேருக்கு ஏற்றாற் போல் அப்படி ஒரு நளினம்!
அந்த ராகத்தில் சில பாடல்கள், இதோ உங்கள் செவிகளுக்கு!

எந்தன் நெஞ்சில் நீங்காத...தென்றல் நீ தானா?


மனம் விரும்புதே உன்னை - உன்னை


தியாகராஜரின் மனவயால கிஞ்சன என்ற நளினகாந்தி கீர்த்தனை - மாண்டலின்


லயதரங்கா என்னும் வாத்தியக் குழு (Band), நளினகாந்தியைப் போட்டி போட்டு வாசிக்கறாங்க! இங்கே கேளுங்க!

என்னாங்க, நளினாவை நளினமா ரசிச்சீங்களா?
அடுத்த பதிவில் இன்னொரு ஃபிகரை ரசிக்கும் வரை...
"வர்ட்டா" ஸ்டைலில் வரட்டா? :-)

Thursday, August 02, 2007

நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)

எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை கேட்ட பின் முன்பு எப்பொழுதோ எம்.எஸ்ஸின் தெய்வீக குரலில் இந்த பாட்டை கேட்ட ஞாபகம் வந்து விட்டது.
கே.ஆர்.எஸ் அண்ணாவின் கருணையால் இணையத்தில் அதற்கான ஒலிப்பேழை கிடைத்தது. அதை திரும்ப திரும்ப கேட்க கேட்க இவ்வளவு அழகான பாடலை நம் இனிய தமிழில் கேட்டால் என்ன என்று தோன்றியது!!! எனக்கு தெரிந்து இந்த பாட்டிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியாது. அதுவுமில்லாமல் எனக்கு தெலுங்கு வேறு தெலுசு லேது!! :-(
என்ன செய்வது????

சகலாகலா வல்லவர் கே.ஆர்.எஸ் அண்ணாவையே திரும்பவும் துணைக்கழைத்தேன். எனக்காக மெனக்கெட்டு இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தார். அதை பார்த்ததில் இருந்து மனதில் ஒரே குஷி. வீட்டிற்கு வந்ததில் இருந்து வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை திரும்ப திரும்பக்கேட்டு கீர்த்தனையில் மூழ்கியே போய் விட்டேன்.
அந்த மூடில் பிறந்தது தான் கீழே நீங்கள் பார்க்கும் அடியேனின் மொழிபெயர்ப்பு. பாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் பொருளுக்கு பொருந்தியும் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து எழுதியதால் ஆங்காங்கே வட மொழி சொற்கள் வருவதையும்,வேறு சில விட்டுக்கொடுக்கல்களையும் தவிர்க்க முடியவில்லை (Some compromises had to be made).

வரிகளை படிக்கும் போது எம்.எஸ்ஸின் இந்த ஒலி கோப்பை கேட்டுக்கொண்டே படித்தால்,கீர்த்தனையின் சுவையை ரசிக்கலாம்.

பாம்பே சகோதரிகளின் குரலில் அமைந்த ஒலிப்பேழையும் உங்களுக்காக உண்டு!!

பாட்டில் இரண்டாவது பத்தி ஒலிப்பேழையில் பாடப்படவில்லை என்பதால் பாட்டு கேக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு மூன்றாவது பத்திக்கு நேரடியாக தாவி விடுங்கள்!! :-)

ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : அன்னமாச்சாரியா


நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ?
கண்களில் மறைவது பேரின்பமோ!!

பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??
எதிரினில் விரிவது, பிரபஞ்சமோ
கடைசியில் கை சேரும் பேரின்பமோ

உண்ணும் உணவும்,உடுத்திடும் உடையும்
இதன் இடை இவண் பணி நாடகமோ!!??
இதில் தோன்றும, இடர் தரும் உபயகர்மங்களும்
இவை தாண்டி இறை சேர்ந்தால்,பேரின்பமோ

தங்கும் பாவமும்,தீராத புண்யமும்
நகைக்கிற காலமும் நாடகமோ
எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனை அன்றி
எது தரும் குறைவில்லா,பேரின்பமோ.

Sunday, April 29, 2007

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை!

சத்குரு ஸ்ரீ தியாகராஜருக்கும் புரட்சிக்கவிஞர் பாராதிதாசனுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கிறீர்களா? - "மருகேலரா ஓ ராகவா" - அதான் தொடர்பு!
இன்று பாவேந்தர் பாரதிதாசனாரின் பிறந்த நாள் என்று நண்பர் சிவபாலனின் பதிவில் கண்டேன் (Apr 29)
பாவேந்தர் தமிழிசைக்கு ஆற்றிய ஆரம்ப கால நற்பணிகள் பல.
அதான் இன்று, இந்த பாரதிதாசன் சிறப்புப் பதிவு!
சரி, இதில் தியாகராஜர் எங்கிருந்து வந்தார்?

நானும் இப்படித் தான் முதலில் திருதிரு என்று முழித்தேன்.
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில், ஒரு தமிழ்ப் பாட்டை அனுப்பி இருந்தார்.
படித்துக் கொண்டே சென்றால்,
"தியாகராஜ" என்று கடைசி வரியில் முத்திரை வருகிறது!
அட, இது என்ன, தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே என்று வியந்து போனேன்.
ஆனால் இன்னும் அதிசயம் காத்து இருந்தது.....

அது பாவேந்தர் பாராதிதாசன் எழுதியது என்றார்.
ச்சே...இருக்கவே முடியாது;
பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர், புரட்சிக்கவி, தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டவர் - அவர் இராமபிரான் மேல் பாட்டு எழுதுவாரா?
அட போங்கப்பா, ஜோக் பண்ணாதீங்க என்று சொன்னால்....

அட, அது பாரதிதாசன் எழுதியது தானாம்!
இளைஞர்கள் எல்லாம் சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்று ஒரு அமைப்பு தொடங்கினார்கள் பாரதியார் காலத்திலேயே!
அதில் இருந்த இளைஞர் தான்
பாரதிதாசன் - அப்போது கனக சுப்புரத்தினம்.

முருகப் பெருமான் மேல் பாடல்கள் எல்லாம் கூட புனைந்துள்ளார் நம் பாவேந்தர்.
ஆனால் அதெல்லாம் இளமையில்; இள மயில் மேல் இளமையில் பாட்டு!
அப்போது கூட தமிழார்வமும் துடிப்பும் உள்ளவராம் கவிஞர்.
தமிழால் எதுவும் செய்ய முடியும் என்கிற துடிப்பு!

தமிழிசை பற்றி ஒரு முறை விவாதிக்கும் போது, இதெல்லாம் தமிழிலே செய்ய முடியுமா என்று ஒரு கேள்வி வந்ததாம். பாரதிதாசனுக்குப் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
சரி, அனைவரும் போற்றி வணங்கும் தியாகராஜரின் கீர்த்தனைகளை,
மெட்டு மாறாமல், கட்டு குலையாமல், அதே மதிப்புடன்,
அப்படியே தமிழில் பாடினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.

உடனே யாரிடமோ பாட்டும், அதன் பொருளும் கேட்டு உணர்ந்து கொண்டார்.
அப்படியே சில பிரபலமான கீர்த்தனைகளையும் தமிழில் மொழிபெயர்த்தாராம்.
அடடா, தியாகராஜ கீர்த்தனையின் சிறப்பே அதன் சொல் எளிமையும், ஆழ்ந்த பக்தியும் தானே!
சுகமான ராகத்தை அதனுடன் கூட்டிப் பாடினால், எவ்வளவு சுகம்!
அதை அப்படியே பாரதிதாசன் தமிழில் கொணர்கிறார் என்றால்! அச்சோ!



மின்னஞ்சல் படித்து விட்டு, நண்பருக்கு உடனே தொலைபேசினேன்!
"அட , எங்க புடிச்சப்பா இந்தப் பாட்டை?
இதே போல வேறு ஏதாச்சும் இருக்கா தெரியுமா?", என்று கேட்டேன்!
அவரோ, இது fwdஇல் வந்ததாகவும், பாரதிதாசன் கவிதைகளிலோ, இல்லை அவர் கட்டுரை எழுதிய பத்திரிகைகளிலோ, தேடிப் பார்த்தால் கிடைக்கும் என்று சொன்னார்.

இது போல் ஒரு மூன்று நான்கு கீர்த்தனையாவது மொழி பெயர்த்து எழுதியிருக்க மாட்டாரா என்று எனக்கு ஒரு நப்பாசை வந்து விட்டது!
உடனே பாரதிதாசன் கவிதைப் புத்தகத்தில் தேடிப் பார்த்தேன்... காணோம்!
சரி, சென்னையில் யாரிடமாச்சும் சொல்லித் தேடச் சொல்ல வேண்டும்!

சிந்து பைரவி படம் என்று நினைக்கிறேன்.
சிவகுமார் தமிழிசையில் ஆர்வம் காட்ட, சுகாசினி சில தியாகராஜ கீர்த்தனைகளைத் தமிழில் பாடிக் காட்டுவார். உடனே, "நீ தய ராது" என்ற பாடலை
"உன் தயவில்லையா" என்று ஒலிபரப்புவார்கள்.
ஆனால் பாடல் முழுக்கவும் இருக்காது. சில வரிகளில் சினிமாவுக்காக, உடனே முடிந்து விடும்!

இந்தப் பாடலைப் பாருங்க!
"மருகேலரா ஓ ராகவா" என்ற பாடல்! என்னிடம் இருந்து ஏன் மறைந்து கொள்கிறாய் ராமா? - இதான் தியாகராஜரின் கேள்வி!
மிகப் பிரபலமான பாடல்! நிறைய கச்சேரிகளில் இதைப் பாடுவார்கள்; கல்யாண வீடுகளில் கூட பாடப்படும் என்றும் நினைக்கிறேன்.

ஆனா பாருங்க, நமக்கும் இசைக்கும் ஏணி வச்சா கூட எட்டாது!
எல்லாமே சுகமாக ரசிக்கும் எண்ணத்தோட சரி. அதிலும் கர்நாடக,தமிழ் இசைகளின் மீது ஒரு விதமான காதல்....
ஆனா இலக்கணம் எல்லாம் ஒரு மண்ணும் எனக்குத் தெரியாது! தெரிஞ்சுக்கனும்னு ஆவல் மட்டும் தான் இருக்கு!

ஆனா உறுதியாகச் சொல்ல முடியும், யார் வேண்டுமானாலும் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கலாம்! அப்படி ஒரு துடிப்பான மெட்டில் அமைந்த பாடல்.
நீங்களே கேட்டுப் பாருங்களேன்....
முக்கியமாகப் படித்தும் பாருங்க....
அழகுத் தமிழ், சுந்தரத் தெலுங்கு இரண்டிலும்!!!

பாவேந்தர் அவ்வளவு அழகாக தமிழ் பெயர்த்துள்ளார்!
இது மொழி பெயர்ப்பு என்று சொல்லவே மனம் வரவில்லை. அதனால் தமிழ் பெயர்ப்பு என்றேன்!


பாவேந்தரின் பாரதிதாசன் கைவண்ணத்தில்...
இதன் மூலப் பாடலைத் தெரிந்தவர்கள், அதே மெட்டில் பாடிக் கொண்டே,
தமிழில் வாய் விட்டுப் படிக்கலாமே....
தமிழில் இதை பாடித் தர யாராச்சும் உதவி செய்தால் இன்னும் சிறப்பு:-)
பல்லவி (எடுப்பு)
மறைவென்ன காண் ஓ ராகவா?
மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி (தொடுப்பு)
மறையும் அனைத்தின் உருவான மேலோய்!
மதியோடு கதிரும் விழியாகக் கொண்டோய்!
(மறைவென்ன காண் ஓ ராகவா)

சரணம் (முடிப்பு)
யாவும் நீயே என்றன்.. அந்-தரங்கம் -அதில்
தீவிரத்தில் தேடித், தெரிந்து கொண்டேன் - ஐயா!
தேவரீரை அன்றிச், சிந்தை ஒன்றும் இல்லேன்;
காக்க வேண்டும் என்னை, தியாகராச வேளே!
(மறைவென்ன காண் ஓ ராகவா)


இது சத்குரு ஸ்ரீதியாகராஜர் பாடிய மூலப் பாடல்
(சொற்களின் பொருள் வருமாறு அடைப்புக்குறிகளில் தந்துள்ளேன் - பிழையிருந்தால் அன்புடனே சுட்டிக் காட்டவும்)
* சுதா ரகுநாதன் பாடுவதை இங்கு கேட்கலாம்
** மகராஜாபுரம் சந்தானம் பாடுவது இங்கே!
*** எஸ். ஜானகி - K.V.மகாதேவன் இசையில் - "சப்தபதி" தெலுங்குத் திரைப்படம்
பல்லவி
மருகேலரா ஓ ராகவா
(ஓ ராகவனே, ஏன் என்னிடம் இருந்து மறைந்து கொள்கிறாய்?)

அனுபல்லவி
மருகேலர சரா சர ரூபா
(மறையும் பொருட்கள் நிறைந்த உலகிலும் ரூபமாக உள்ளவனே)
பராத்பர சூர்ய சுதாகர லோசன
(பரம்பொருளே, சூர்ய சந்திரர்களை விழிகளாகக் கொண்டவனே)

சரணம்
அன்னி நீவனுசு அந்த ரங்க முன
(எல்லாப் பொருளிலும் நீதான் என்று என் அந்தரங்கத்துக்கு உள்ளே)
தின்னக வேடகி தெலிசி கொண்டே னய்ய
(நன்றாக வேட்கைப்பட்டு தெரிந்து கொண்டேன் ஐயனே)
நின்னே கானி மடி நென்ன ஜால நொருல
(உன்னை அன்றி வேறு என் சிந்தனை வேறு இல்லை)
நன்னு ப்ரோவ வய்ய தியாக ராஜ னுத
(என்னைக் காத்து ரட்சி, தியாகராஜன் வணங்கும் தெய்வமே!)

ராகம்: ஜெயந்தஸ்ரீ
தாளம்: தேசாதி


குரல்:
* உன்னி கிருஷ்ணன் - தொகுப்பிசை(Fusion)
** உன்னி கிருஷ்ணன் - ஸ்ரீ குமரன் தம்பி இசையில் - "பந்துக்கள் சத்ருக்கள்", மலையாளத் திரைப்படம்

வாத்தியம்:
* துர்கா பிரசாத் - கோட்டு வாத்தியம்


என்ன நண்பர்களே, பாட்டு படிச்சீங்களா? புடிச்சு இருந்துச்சா?? :-)

Tuesday, April 24, 2007

நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்?

"நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்? நையாண்டி உங்களுக்கு??"
- எந்தப் படம்? நினைவுக்கு வருகிறதா? ...... சிந்து பைரவியில் நம்ம சிந்து, ஜேகேபி கிட்ட பொங்கி எழுவாங்க! :-)

நாட்டுப் பாடல்களில் என்ன சார் இல்ல? அதுல சொல்லப் படாத கருத்துக்களா? வெளிப்படுத்தாத உணர்ச்சிகளா?
வீரம், விவேகம், கோபம், ஹாஸ்யம் எது சார் இல்ல?
-இதுவும் அதே படத்து டயலாக் தான்!

அண்மையில் ஒரு அருமையான நாட்டுப் பாடல் கிடைத்தது!
அது காவடிச் சிந்து மெட்டில் அமைந்திருந்தது!
பொதுவா காவடி-ன்னாலே அது முருகனுக்குத் தான்!
ஆனா பாருங்க, இங்குக் கண்ணனுக்குக் காவடிச் சிந்து!
"மாடு மேய்க்கும் கண்ணே - போக வேண்டாம் சொன்னேன்" என்ற பாட்டு.
கண்ணபிரானுக்கு காவடி டோய்! :-)



அதாச்சும் சிந்து என்பது நடைப்பாடல்.
பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! தாளம் எல்லாம் தனியா எதுவும் போட வேண்டாம்! பாட்டில் தானா வந்து விடும்!
காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகத்தில் பாடுவார்கள். நாட்டக்குறிஞ்சி ராகமும் உண்டு! காவடிச் சிந்து, அதைப் பற்றிய குறிப்புகள், அண்ணாமலை ரெட்டியார் போன்ற தகவல்களை எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்று, நேரடியா செவிக்கு விருந்து!

ஒரு தாய்க்கும், குட்டி மகனுக்கும் டிஸ்கஷன் நடக்கிறது. (உரையாடல்)
டேய் மவனே...வெளியில போவாதடா...எத்தனை வாட்டிடா சொல்லறது!
போம்மா...நீ எப்பவும் இப்படித் தான்! வெளியில ஒண்ணும் ஆவாது! எல்லாம் நான் பாத்துக்கறேன். ஆனா அப்பா கேட்டா மட்டும் சமாளிச்சுக்கோ! :-)

அருணா சாய்ராம், மார்கழி மகோற்சவத்தில் அதைப் பாடினார். நீங்களே கேளுங்கள்! உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்!


பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------
ராகம்=குறிஞ்சி
தாளம்=?
வரிகள்=அனானிமஸ் :-)
குரல்=அருணா சாயிராம்
வீடியோவிற்கு நன்றி=adomac


இந்தப் பதிவைக், காலஞ்சென்ற என் பாட்டி (ஆயா என்று அழைப்போம்)
திருமதி ஜனகவல்லி அம்மாள் நினைவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


அவர் வாழைப்பந்தல் கிராமத்தில் பாடாத நாட்டுப் பாடல்களா?

இராமாயாணக் கதையை முழுக்கவும் நாட்டுப் பாடலில் பாடி விடுவாரே!
அதுவும் பொங்கல் கும்மியின் போது, மொத்த உரே முற்றத்துக்கு வந்து கும்மிப் பாட்டுக்கு ஆடுமே! சிறு வயதில் அவரைப் பாடச் சொல்லி, TDK-90 காசெட் டேப்பில் பதிந்தவற்றை எல்லாம் சிடியாக்கணும்!

Tuesday, April 17, 2007

உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?

பிறந்த நாள் பார்ட்டிகளில் பத்து பலூன்கள் ஊதவே, முழி பிதுங்குது! நாதசுரத்தில் அவ்வளவு நேரம் காற்றை விட்டு எப்படித் தான் ஊதுகிறார்களோ? அதுவும் அவ்வளவு வாசித்தும், கடைசியில் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றால்?
இருந்தும் நமக்கு மங்கலம் தங்குவதற்காகவே வாசிக்கும் அனைத்து நாதசுரக் கலைஞர்களுக்கும் நமது வந்தனங்கள்!

இசை குறித்த வலைப்பூ என்பதால் மங்கல இசையான, நாதசுரத்தில் இருந்தே தொடங்குவோம்! சென்ற பதிவில் திராச ஐயா, ஷேக் சின்ன மெளலானா அவர்களின் வாத்திய இசையைத் தந்திருந்தார்!

"நாதஸ்" என்று செல்லமாக அழைக்கப்பட்டது ஒரு திரைப்படத்தில்.
நாதஸ்வரம் "நாதஸ்" ஆனால், தவில் என்ன ஆகும்? :-)
இதிலிருந்தே தெரியவில்லையா, தவிலை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்று! :-)

மற்ற பல வாத்தியம், இசைக் கருவிகளை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படியும் பயன்படுத்தலாம். ஆனால் நாதசுரமும், தவிலும் மட்டும், எப்போதும் மங்கல இசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்!
இது ஒன்றே போதும், இவ்விரு கருவிகளின் பெருமையைச் சொல்ல!

நாதசுரம் என்றால் என்ன? ஒத்து ஊதுதல்-ன்னா என்ன?
நான் சொல்வதைக் காட்டிலும், கீழே வீடியோவைப் பாருங்க!
மெளலியின் பிளைட்-172 என்ற நாடகம். அதில் என்னமாய் விளையாட்டா விளக்கறார் பாருங்க! :-)

நாதசுரத்தின் பலமே, இப்போது அதற்குப் பலவீனம்! - என்ன தெரியுமா?

1. இட நெருக்கடி அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் வாசிக்க முடியாது.
ஒலி பெருக்கி இல்லாமலேயே அரங்கத்தின் கோடியில் உள்ளவரும் கேட்கக் கூடிய வாத்தியம் இது.
இதுவே அதன் பலவீனமாகிப் போய் விட்டது இப்போது.
ஒரு சின்ன அறைக்குள் வாசித்தால், அவ்வளவு தான்! வந்தது வினை!
உடனே Noise Pollution என்று யாருச்சும் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்!

2. இதன் பயிற்சி மிகவும் கடினமானது. தனிமையில் கூடப் பயில முடியாது. சத்தமே ஊரைக் கூட்டி விடும். தப்பும் தவறுமாக பயிற்சியில் வாசித்தாலும், ஊருக்கே தெரிந்து விடும்! :-(

3. இது போதாதென்று பயிலும் மாணவ/மாணவிகள் விடும் மூச்சுக் காற்றை எண்ணிப் பாருங்கள்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் சொல்வது போல், நாபிக் கமலத்தில் (தொப்புள்) இருந்து காற்றை இழுத்து, மேலே ஏற்றி, இழுத்துப் பிடித்து, ஊத வேண்டும். பல நாயனக்காரர்களின் கழுத்தைப் பாருங்கள். வீங்கி இருக்கும்!


நாதசுரத்துக்குப் போட்டியாக அண்மைக் காலங்களில் வந்தவை இரண்டு வாத்தியங்கள்
1. க்ளாரினெட்
2. சாக்ஸ் என்னும் சாக்ஸபோன்
இருப்பினும் மங்கல இசை என்ற இடத்தை, அவற்றால் இன்னும் பிடிக்க முடியவில்லை!
3. இன்னொரு வாத்தியம் - முகவீணை என்று பெயர். இது உருவில் சிறிய, குட்டி நாதசுரம்.

நாதசுரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதா?
இல்லை ஆந்திரா, கர்னாடகம், இன்னும் கேரளத்தில் கூட வாசிக்கிறார்கள்!உலகில் தமிழர் இருக்கும் இடமெல்லாம் வாசிக்கிறார்கள்.

கோவில், கல்யாணம் - இதற்கு மட்டுமே நாதசுரம் என்று இருந்த நிலை மாறிவிட்டது! பல கச்சேரிகளில் வாசிப்பு காண முடிகிறது!
இந்தக் காலத் திரைப்படங்களில் கூட, இசை அமைப்பாளர்கள், இதைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
பழனியில் தமிழக அரசின், ஒரு நாதசுரக் கல்லூரியே உள்ளது.
இன்னும் கீபோர்டில், நாதசுரம் வரவில்லை. அவ்வளவு தான்! :-)

நான் இந்த முறை சென்னை சென்றிருந்த போது, ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் நண்பர் ஒருவர், ஒரு குட்டி எலெக்ட்ரானிக் (மின்னணு) கருவியைக் காண்பித்தார். பார்ப்பதற்கு ஏதோ பொம்மைக் கப்&சாசர் போல் இருந்தது. அதை எடுத்து நாதசுரத்தின் அடிப்பாகத்தில் பொருத்தினார் மனுசன்.

இப்ப ஊதினா, ஏதோ புல்லாங்குழல் ஊதுவது போல் மெல்லிதாய் வருகிறது நாத சப்தம்! ஆகா...அறிவியல் முன்னேற்றங்களை இது போன்று தொன்மையான இசை வளரப் பயன்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து வருவதாகச் சொன்னர் நண்பர்!


ஒரு காலத்தில், நாதசுரம்-தவில், சாதியின் பாற்பட்டும் இருந்தது.
சமூகத்தில் அதன் இசைக்கு மயங்கியவர்கள், அதனை இசைக்கும் கலைஞர்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருந்தார்கள்.
ஆனால் இந்தப் போக்கை வெட்டி வீழ்த்தி, நாதசுரக் கலைஞன் ஒரு ராஜாவைப் போல் உலா வர முடியும், அவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்
TN ராஜரத்தினம் பிள்ளை.




அவரைப் போலவே நாதசுர இசையில் பெரும் புகழ் அடைந்தவர்கள் வெகு சிலரே! காருக்குறிச்சி அருணாச்சலம் இன்னொரு பெரும் மேதை.
இசுலாமிய மதத்தினரான ஷேக் சின்ன மெளலானா, இதைக் கற்க மிகவும் பாடுபட்டார். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு இடையூறுகளோ, அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றிகள்! இப்படி மதங்களை கடந்தது நாதசுர இசை!

பெண்களால், இப்படி "தம்" பிடித்து ஊத முடியுமா?
சேலும் பொன்னுத்தாயி செய்து காட்டினார். உலகமே வியந்தது!

நாதசுரம்-தவில் காம்பினேஷன் களை கட்டத் தொடங்கியது!
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்-வலையப்பட்டி சுப்ரமணியம்,
MPN சேதுராமன்-பொன்னுசாமி,
AKC நடராஜன்,
ஹரித்வாரமங்கலம் பழனிவேல்,
திருவிழா ஜெய்சங்கர்,
மாம்பலம் சிவா என்று கலைஞர்கள் எல்லாம் புகழ் பெறத் துவங்கினார்கள்!
இலங்கை மற்றும் சிங்கையிலும் பெரும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பெயர்களையும் சொல்லி உதவுங்களேன்!

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம், மக்களிடையே நாதசுரத்திற்கு ஒரு sensation-ஐ உருவாக்கித் தந்தது. நாதசுரக் கலைஞர்கள் மற்ற எந்தக் கலைஞர்களுக்கும் குறைவானவர்கள் அல்ல என்ற ஒரு நல்ல நிலை உருவாகவும் தொடங்கியது.

சரி, முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம்!
நம்மில் எத்தனை பேர், கல்யாணத்துக்குப் போனால், இந்த நாதசுர இசையைக் காது கொடுத்துக் கேட்போம்?

இப்போதெல்லாம் நல்ல சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள். அப்போது கூட நாம் காது கொடுத்துக் கேட்கிறோமா?
சரி, இனி மேலாவது கேட்க, முயற்சி செய்யலாமா?
வாசிப்பு நன்றாக இருந்தால், ஒரு எட்டு போய், "நல்லா வாசிச்சீங்க" என்று சொல்லி விட்டு வரலாமா?

அண்மையில் சென்னையில், நாதசுரத்துக்கு என்றே தனி விழா ஒன்று நடைபெற்றது! ஈழத்து நாதசுரக் கலைஞர் முருகதாஸ் என்பவர், இதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
அது பற்றிய யோகன் அண்ணா/BBC பதிவு
இங்கே!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP