Sunday, November 18, 2007

காதல் இன்பம்: வான் நிலா, நிலா அல்ல! உன் வாலிபம் நிலா!

அமர கானம்-னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? வரிகளா? இசையா? பாடறவங்க குரலா? - எது ஒசத்தி? - இதுக்கு உங்களால் விடை கண்டுபுடிக்க முடியலைன்னா, அது அமர கானம் தான்! :-)

நண்பர் ஜி.ராகவன் இன்னிக்கு காலையில், சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டிருந்தாரு! :-)
ஒரு போட்டி, ரெண்டு பாட்டு! தெலுங்குப் பாட்டு மெட்டில் இருந்து தமிழ்ப் பாட்டின் மெட்டைக் கண்டுபிடிக்கணுமாம்! அதில் ஒரு பாட்டு, "வான் நிலா நிலா அல்ல". அதுல ஜெயிச்சதுக்குத் தனியா பரிசு கொடுக்கறதா வேற சொல்லி இருக்காரு. G3, உங்களிடம் சொன்னரா? இப்பவே எழுதி வாங்கிக்குங்க :-)

பாட்டைக் கேட்டதில் இருந்து, இந்த இசையிலேயே மூழ்கி விட்டேன் சில நேரத்துக்கு! ஒரு பத்து முறையாச்சும் திரும்ப திரும்பக் கேட்டிருப்பேன்! - அதுவும் அந்த வயலின் இசையில் - அப்படி ஒரு சுகம்! காதல் சுகம்!
காதலைப் பற்றி நினைச்சாலே ஒரு சுகம்! அதே அந்தக் காதலைப் புதுமையாகச் சொன்னா அது ஒரு புது சுகம் தானே!
அவள், என் காதலா, லலா, லலா என்னும் போது,
லலா லலா என்று காதலியின் மடியிலா, மொட்டை மாடியிலா, வான் நிலாவிலா, - தாலாட்டித் தூங்கும் சுகம் தெரியும் அல்லவா?


மொதல்ல காதல் தவழும் ஒவ்வொரு வரியையும் படிச்சி, ருசிச்சிப் பாருங்க!
அப்பறம் பாட்டின் பின்னணி என்ன-ன்னு பார்ப்போம்! இந்தப் பாட்டுக்கு அழுத்தமான இசை-ன்னு எடுத்துக்கிட்டா, வெறும் ஒத்தை வயலின் தான்! வேற ஒன்னுமே இல்ல!
இதோ SPB-யின் குரலில் கேட்டுக் கொண்டே படிங்க! இங்கே!


லா லலா லலா லலா - லலால லாலலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இசை.....
பாருங்க...மானே இல்லாத ஊராம்! அதனால் காதலி கண்ணுலயே மானைக் காட்டுகிறாளாம்! சாயல் கண்ணிலா!
பூ பூக்காத பூமி-ன்னு பூவுக்குப் பதிலா, பெண்ணைப் படைத்தானாம்! ஜாடை பெண்ணிலா!
பொண்ணு வைக்கற இடத்தில் பூவை வைக்கிறோன்-னு சொல்வாங்களே! அது இதானா? :-)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இங்கே மிகவும் அருமை.....
(இன்பம் கட்டிலா என்று கேட்கிறார். கட்டிலா இன்பம் கட்டு இல்லாத இன்பம்-ன்னும் கொள்ளலாம்!
தேகக் கட்டிலா? - கட்டான தேகமா? இல்லை தேகமே கட்டிலா?
ஆனா தீதிலா காதலான்னு கேட்டு, காதல் இன்பத்தை முன்னாடி கொண்டு வந்துடறாரு கவிஞர்! காமத்து இன்பம்...காதல் இன்பமாய் மாறும் போது பேரின்பம் என்பதை அடுத்த பத்தியில் வெட்ட வெளிச்சம் ஆக்கிடறாரு)


வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

(சொந்தம் இருளிலா? - சென்ற பத்தியில் தேகக் கட்டிலான்னு கேட்டவர், இங்கு இருளிலா என்கிறார். இல்லை. சொந்தமும் பந்தமும் காதலும் இன்பமும்..ஒரு பூவையின் அருளிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? - பூவையின் அருளில் தான்! நெஞ்சின் ஏட்டில் தான்!)

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: S.P.பாலசுப்ரமணியம்
வயலின் வாசித்தவர்: மணி

பாட்டு ஒலிப்பதிவு முடிந்ததும் SPB, வயலின் மணியை நோக்கித் திரும்பி இரு கைகளையும் தட்டினாராம். அப்படி ஒரு வயலின் சுகம் இந்தப் பாட்டில்!

தம்பி சீவீஆர் வயலின் பற்றிய பதிவு ஒன்றை இசை இன்பத்தில் முன்பு இட்டிருந்தார்.
அப்போ ஓப்பனிங் பீசாக நல்ல வயலின் இசை ஒன்றைப் போட ஆசைப்பட்டார். என்னிடமும் கேட்டார். அப்போ இந்தப் பாட்டு எப்படியோ மிஸ்ஸாகி விட்டது...இப்போ மீண்டும் அவருக்காகவும், உங்களுக்காக இங்கு வந்து விட்டது! :-)



இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!

கண்ணதாசன்: டேய் விசு! என்னது இது?
நீ பாட்டுக்கு ல லலா, லா லலான்னு வாயாலயே வேகமாச் சொல்லிட்டே! இதுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது! அதுக்குன்னு வார்த்தை வரவேணாமா?
விஸ்வநாதன்: அண்ணே சரியாத் தேடிப் பாருங்கண்ணே! கிடைக்கும்!

கண்ணதாசன்: எனக்கு என்னமோ இது சரியா வரும்-னு தோனலை...நீ வேற ட்யூன் போடுடா!
விஸ்வநாதன்: இதப் பாருங்க செட்டியாரே! இது தான் ட்யூன்! இதுக்கு எழுத முடிஞ்சா எழுதுங்க! இல்ல நான் இதுக்கு மட்டும் வேற கவிஞர வச்சி எழுதிக்கறேன்!
(இப்படி ஒரு அன்பு ஊடல் அவர்களுக்குள். இதெல்லாம் கண்ணதாசன்-விஸ்வநாதன் விஷயத்துல சகஜம்-னு இண்டஸ்ட்ரிக்கே தெரியும்!)

கண்ணதாசன்: டேய்...அப்படி எல்லாம் போயிடாதே! சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...
என்னமோ பெருசா லா, லா, லா, லு-ன்னு ட்யூனைக் கொடுத்தியே! பாரு நானும் லா, லா, லா, லா ன்னே வச்சி எழுதறேன். அப்போ தெரியும்!
வான் நிலா...நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...

விஸ்வநாதன்: அண்ணே, அடேயப்பா...பாதர் இன் லா, சன் இன் லா, பிரதர் இன லா வைத் தவிர எல்லா லாவும் உள்ளே புகுத்திட்டீங்களே! இவ்ளோ சரக்கை வச்சிக்கிட்டு ஏண்ணே முரண்டு பிடிக்கறீங்க?
கண்ணதாசன்: டேய், உன் கூட நான் விளையாடாம, வேற யார்டா விளையாடப் போறாங்க?


இப்படி லா லா ன்னு வைத்து, இன்னொரு பாட்டும் பின்னாளில் வந்தது!
மெளனம் சம்மதம் படத்தில் இளையராஜா போட்டாரு; ஜேசுதாஸ்-சித்ரா பாடுவாங்க, கல்யாண தேன் நிலா ன்னு!
ஆனா முதல் காதல், என்னிக்குமே முதல் காதல் தானே? என்ன சொல்றீங்க? வான் நிலா நிலா அல்ல - அது போல் வேறு எந்த நிலாவும் அல்ல!

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் மெய்யிலா
பார்ப்போமே ஆவலா வாவா வா நிலா


கடைசியா:
ஜிரா மட்டும் தான் கேள்வி கேட்பாரா? நான் கேக்கக் கூடாதா? :-)
வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க?

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP