Saturday, December 22, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி:

சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!.
'நீ மாடலு' என்கிற பூர்விகல்யாணி கீர்த்தனையும் இந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது. இது பரதநாட்டியத்தில் ஜவளியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பூர்வி கல்யாணியில் இதர கிருதிகள்/கீர்த்தனைகள்:

* நின்னுவின - சியாமா சாஸ்திரி

Dr.N.ரமணி அவர்களின் புல்லாங்குழலில் இந்த பாடலை இங்கு கேட்கலாம். இந்தப் பாடலில் காஞ்சி ஏகாம்பரநாதர் / காமாட்சி பற்றிய குறிப்பும் உண்டு.

* மொய்யார் தடம் - மாணிக்கவாசகர்

பூர்வி கல்யாணி ராகத்தில் இந்த திருவெம்பாவை பாடலுக்கு பண்ணேற்றி - குறிப்பாக செம்மங்குடி அவர்களும் எம்.எஸ் அம்மா அவர்களும் பாடி இருக்கிறார்கள்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழற்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

இந்த மார்கழி மாதத்திற்கு பொருத்தமான இந்த திருப்பள்ளிஎழுச்சியை எம்.எஸ் அம்மா பாடிட இங்கே கேட்கலாம்.

* பரதெய்வம் உனையன்றி - பாபநாசம் சிவன்

இந்தக் கிருதியின் ஆலாபனையும் பின்னர் அதை வயலினில் இசைத்திடவும் கேட்கலாம். பூர்வி கல்யாணியின் இனிமையை இதில் இனிதே நுகரலாம்:

03 Paratheivam-POO...


இந்தக் கிருதியின் வரிகள் இங்கே:

பல்லவி
பரதெய்வம் உனையன்றி உண்டோ
பலநோய்க்கு மருந்தே என் துயர்தீர்க்கும் காருண்ய (பரதெய்வம்)

அனுபல்லவி
ஹரனே சதாசிவ பரனே வராபய
கரனே உமையாள் மனமகிழ் சுந்தரனே எமையாள் மறைபுகழும் (பரதெய்வம்)

சரணம்
அடிமுடியார் கண்டார் ஆதி-மத்
யாந்த ரஹித சம்போ-நாமமுடன்
வடிவமும் உனக்குண்டோ-மாலயனும்
வணங்கும் சுவயம்போ
சடை முடியணி கைலாச விஹாரா
சங்கரா த்ரிபுர ஹரநிர்விகார (பரதெய்வம்)


தொடர்ந்து, சுதா ரகுநாதன் அவர்கள் இந்தப் பாடலை பாடிடக் கேட்கலாம்:

03 Paratheivam-Sud...


திரை இசையில் பூர்விகல்யாணி:

* சந்திக்க துடித்தேன் பொன்மானே / SPB, ஜானகி / வேதம் புதிது

SandhikkaThudittae...

(இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை என்பது வேறு விஷயம்!)

Tuesday, December 18, 2007

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 1

பூர்விகல்யாணி ராகத்தின் ஆரோகணம் - அவரோகணம்:

ஸ ரி1 க3 ம2 ப த2 ப ஸ
ஸ நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ
இது 53ஆவது மேளகர்த்தா ராகமாகிய கமனாச்ரமவின் ஜன்ய ராகம்.

இதே ராகம் முத்துசாமி தீக்ஷிதர் பாராம்பரியத்தில் கமகக்கிரியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் பிரயோகத்தில் சற்றே வேறுபடும் என்று சொல்வாரும் உண்டு. இந்த ராகத்தினை பூர்வ கல்யாணி என்றும் பூரிகல்யாணி என்ற பெயரில் வழங்குவாரும் உண்டு!.

முன்பொருநாள் அலவலக நண்பர் ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மின் அஞ்சலில் அறிவித்திருந்தார். என்ன பெயர் வைத்திருக்கிறார் என்ற கேட்டபோது மின் அஞ்சலில் 'Purvi' என்றார். எனக்கோ பெயரின் பொருள் புரியவில்லை. அவரிடம் பொருள் கேட்டபோது - இது ஒரு ராகத்தின் பெயர் என்று வேறு சொல்கிறார். அப்போதுதான் ஹிந்துஸ்தானியில் 'பூர்வி' என்றொரு ராகம் இருப்பதாகத் தெரிய வந்தது! (இந்த ராகம் கர்நாடக சங்கீத முறையில் ராகம் 'கர்மவர்தினி'க்கு சமானமாகும்).

இராக சஞ்சாரங்கள்:

கமதஸ் - பதபஸ் - நிதமக - தமகரி போன்றவை.

கீழ் ஸ்தாயில் இருந்து தொடங்குவது இந்த ராகத்தில்் இயற்றப்பட்ட பாடல்களுக்கு வழக்கமாகவும் இருந்திருக்கிறது.
உதாரணம் : நின்னேகோரி (வர்ணம் - சொண்டி வெங்கடசுப்பய்யா) மற்றும் காரணம் கேட்டு வாடி (கோபாலகிருஷ்ண பாரதி)

இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் சில இங்கே:

* எக்கலாத்திலும் உனைமறவா - திருவாரூர் ராமசாமிப்பிள்ளை
நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட இந்தக் கிருதியை இங்கு கேட்கலாம். இது அன்னை மீனாட்சியைப் பாடும் கிருதி.

* ஆனந்த நடமாடுவார் தில்லை - நீலகண்ட சிவன்
ஷேக் சின்ன மௌலானா அவர்களின் இனிய நாதஸ்வரதில் இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

* காரணம் கேட்டு வாடி - கோபாலகிருஷ்ண பாரதி(?). மதுரஸ்ம்ரிதி என்றொரு ஆல்பத்தில் இந்தப் பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம். (அந்தக் தொகுப்பில் இந்தப் பாடல் சுத்தானந்த பாரதியால் இயற்றப் பட்டதாக குறிப்படப்பட்டுள்ளது.(?))

*சற்றே விலகி இரும் பிள்ளாய் - கோபாலகிருஷ்ண பாரதி



இந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி சில வரிகள்:
திருப்புங்கூரில் சிவலோக நாதனை தரிசிக்க நந்தனார் கோவிலுக்கு வெளியே நின்று எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கோ வழியில் நந்தி மறைத்துக் கொண்டு இருக்கிறது. கண்ணுக்கு சரியாகத் தெரியவில்லை. உடனே,

"மாடு வழி மறித்திருக்குதே மலை போலே...உற்றுப் பார்க்க சற்றே விலகாதா..."

என்று கதறுகிறார். இது காதில் விழ, மகேஸ்வரனே
"சற்றே விலகி இரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குதாமே, சற்றே விலகி இரும் பிள்ளாய்.."
என்று நந்திக்கு ஆணையிடுகிறார்.
"நற்றவம் புரிய நம்மிடம்் திருநாளை போவார் வந்திருக்கின்றார், சற்றே விலகி இரும் பிள்ளாய்..."
என்றதும் நந்தி விலகி வழி விட்டது.

இந்தப் பாடலை ராகா.காம் இல் இங்கு கேட்கலாம். இங்கு ஒரு விளம்பரத்திற்குப் பிறகு பாடல் ஒலிக்கும், நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் குரலில்.

* மீனாக்ஷி மேமுதம் - முத்துசாமி தீக்ஷிதர்

இந்த கிருதியோடு சேர்த்து சின்னக் கதையும் உண்டு:

மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியில் அம்மனை தரிசிக்கும்போது, அவரையே அறியாத பரவச நிலையில் இந்தப் பாடலை பாடுகிறார். இந்த பாடலில் மீன லோசனி - பாவ மோசனி - கதம்ப வன வாசினி - என்கிற வரிகளில் வரும். இதில் பாவ மோசனி - என்ற வரிகளை அழுத்தமாக பல சங்கதிகளில் பாடிக்கொண்டு இருக்கும்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடனே தீக்ஷிதர், "அம்மா, உன்னை மனம் நோகச் செய்துவிட்ட பாவியாகி விட்டேனா நான்" என்று கண்ணீர் மல்கக் கேட்டார். உடனே அன்னையின் கண்ணீர் நின்றது, சிரித்த முகமாக மாறியது. அருகே இருந்த குருக்கள், "சுவாமி, இப்படி அம்பாளின் ஆனந்தக் கண்ணீரையும், பின்னர் சிரித்த முகமாய் மாறியதையும்ன நான் என்றும் கண்டதில்லை. நீர் பெரும் பாக்கியசாலி" என்றார். பின்னர், தன் இறுதி நாட்களில் தீக்ஷிதர் தனது சிஷ்யர்களை அழைத்து இந்தப் பாடலை பாடச்சொல்லிக் கேட்டவாறே, அதுவும் 'மீன லோசனி - பாவ மோசனி' எனற வரிகள் வரும்போது உயிர் நீர்த்தார்.

மீனாட்சி அம்மனையே மகிழ்வித்த பூர்விகல்யாணியின் ராக வலிமை அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. எத்தனை மனக்கவலை நிலையிலும் மனசாந்தி அளித்து மங்களம் தரும் குணம் கொண்டது பூர்விகல்யாணி எனலாம். இது போன்ற மகத்துவங்கள் பல நிறைந்த நம் சங்கீதத்தை 'நாத உபாசனை' என்று சொல்வது சாலப் பொருந்தும்.

இந்தக் கிருதியை எஸ்.சௌம்யா அவர்கள் பாடிடக் கேட்கலாம். முதலில் ஆலாபனையும், பின்பு வயலினில் வாசிப்பதையும், தொடர்ந்து கிருதியைப் பாடுவதையும் கீழே கேட்கலாம்.

02_MeenakshiMemudh...



பிரியா சிஸ்டர்ஸ் (ஹரிப்பிரியா, ஷண்முகப்பிரியா) அவர்கள் இந்தக் கிருதியைப் பாடுவது யூட்யூபில்:

பகுதி 1:



பகுதி 2:



(அடுத்த பகுதியில் தொடரும்...)
உசாத்துணை:
* சுதாமா அவர்களின் சங்கீத அலைகள்

* கர்நாடிகா.நெட் - பூர்விகல்யாணி

நன்றி:
* சிவலோகநாத சுவாமி ஆலய நுழைவாயில் படம் - ஃபிளிக்கரில் ரமேஷ்

* Music India online மற்றும் Raaga தளங்கள்

Sunday, November 18, 2007

காதல் இன்பம்: வான் நிலா, நிலா அல்ல! உன் வாலிபம் நிலா!

அமர கானம்-னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? வரிகளா? இசையா? பாடறவங்க குரலா? - எது ஒசத்தி? - இதுக்கு உங்களால் விடை கண்டுபுடிக்க முடியலைன்னா, அது அமர கானம் தான்! :-)

நண்பர் ஜி.ராகவன் இன்னிக்கு காலையில், சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டிருந்தாரு! :-)
ஒரு போட்டி, ரெண்டு பாட்டு! தெலுங்குப் பாட்டு மெட்டில் இருந்து தமிழ்ப் பாட்டின் மெட்டைக் கண்டுபிடிக்கணுமாம்! அதில் ஒரு பாட்டு, "வான் நிலா நிலா அல்ல". அதுல ஜெயிச்சதுக்குத் தனியா பரிசு கொடுக்கறதா வேற சொல்லி இருக்காரு. G3, உங்களிடம் சொன்னரா? இப்பவே எழுதி வாங்கிக்குங்க :-)

பாட்டைக் கேட்டதில் இருந்து, இந்த இசையிலேயே மூழ்கி விட்டேன் சில நேரத்துக்கு! ஒரு பத்து முறையாச்சும் திரும்ப திரும்பக் கேட்டிருப்பேன்! - அதுவும் அந்த வயலின் இசையில் - அப்படி ஒரு சுகம்! காதல் சுகம்!
காதலைப் பற்றி நினைச்சாலே ஒரு சுகம்! அதே அந்தக் காதலைப் புதுமையாகச் சொன்னா அது ஒரு புது சுகம் தானே!
அவள், என் காதலா, லலா, லலா என்னும் போது,
லலா லலா என்று காதலியின் மடியிலா, மொட்டை மாடியிலா, வான் நிலாவிலா, - தாலாட்டித் தூங்கும் சுகம் தெரியும் அல்லவா?


மொதல்ல காதல் தவழும் ஒவ்வொரு வரியையும் படிச்சி, ருசிச்சிப் பாருங்க!
அப்பறம் பாட்டின் பின்னணி என்ன-ன்னு பார்ப்போம்! இந்தப் பாட்டுக்கு அழுத்தமான இசை-ன்னு எடுத்துக்கிட்டா, வெறும் ஒத்தை வயலின் தான்! வேற ஒன்னுமே இல்ல!
இதோ SPB-யின் குரலில் கேட்டுக் கொண்டே படிங்க! இங்கே!


லா லலா லலா லலா - லலால லாலலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இசை.....
பாருங்க...மானே இல்லாத ஊராம்! அதனால் காதலி கண்ணுலயே மானைக் காட்டுகிறாளாம்! சாயல் கண்ணிலா!
பூ பூக்காத பூமி-ன்னு பூவுக்குப் பதிலா, பெண்ணைப் படைத்தானாம்! ஜாடை பெண்ணிலா!
பொண்ணு வைக்கற இடத்தில் பூவை வைக்கிறோன்-னு சொல்வாங்களே! அது இதானா? :-)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா? அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வயலின் இங்கே மிகவும் அருமை.....
(இன்பம் கட்டிலா என்று கேட்கிறார். கட்டிலா இன்பம் கட்டு இல்லாத இன்பம்-ன்னும் கொள்ளலாம்!
தேகக் கட்டிலா? - கட்டான தேகமா? இல்லை தேகமே கட்டிலா?
ஆனா தீதிலா காதலான்னு கேட்டு, காதல் இன்பத்தை முன்னாடி கொண்டு வந்துடறாரு கவிஞர்! காமத்து இன்பம்...காதல் இன்பமாய் மாறும் போது பேரின்பம் என்பதை அடுத்த பத்தியில் வெட்ட வெளிச்சம் ஆக்கிடறாரு)


வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

(சொந்தம் இருளிலா? - சென்ற பத்தியில் தேகக் கட்டிலான்னு கேட்டவர், இங்கு இருளிலா என்கிறார். இல்லை. சொந்தமும் பந்தமும் காதலும் இன்பமும்..ஒரு பூவையின் அருளிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? - பூவையின் அருளில் தான்! நெஞ்சின் ஏட்டில் தான்!)

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: S.P.பாலசுப்ரமணியம்
வயலின் வாசித்தவர்: மணி

பாட்டு ஒலிப்பதிவு முடிந்ததும் SPB, வயலின் மணியை நோக்கித் திரும்பி இரு கைகளையும் தட்டினாராம். அப்படி ஒரு வயலின் சுகம் இந்தப் பாட்டில்!

தம்பி சீவீஆர் வயலின் பற்றிய பதிவு ஒன்றை இசை இன்பத்தில் முன்பு இட்டிருந்தார்.
அப்போ ஓப்பனிங் பீசாக நல்ல வயலின் இசை ஒன்றைப் போட ஆசைப்பட்டார். என்னிடமும் கேட்டார். அப்போ இந்தப் பாட்டு எப்படியோ மிஸ்ஸாகி விட்டது...இப்போ மீண்டும் அவருக்காகவும், உங்களுக்காக இங்கு வந்து விட்டது! :-)



இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!

கண்ணதாசன்: டேய் விசு! என்னது இது?
நீ பாட்டுக்கு ல லலா, லா லலான்னு வாயாலயே வேகமாச் சொல்லிட்டே! இதுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது! அதுக்குன்னு வார்த்தை வரவேணாமா?
விஸ்வநாதன்: அண்ணே சரியாத் தேடிப் பாருங்கண்ணே! கிடைக்கும்!

கண்ணதாசன்: எனக்கு என்னமோ இது சரியா வரும்-னு தோனலை...நீ வேற ட்யூன் போடுடா!
விஸ்வநாதன்: இதப் பாருங்க செட்டியாரே! இது தான் ட்யூன்! இதுக்கு எழுத முடிஞ்சா எழுதுங்க! இல்ல நான் இதுக்கு மட்டும் வேற கவிஞர வச்சி எழுதிக்கறேன்!
(இப்படி ஒரு அன்பு ஊடல் அவர்களுக்குள். இதெல்லாம் கண்ணதாசன்-விஸ்வநாதன் விஷயத்துல சகஜம்-னு இண்டஸ்ட்ரிக்கே தெரியும்!)

கண்ணதாசன்: டேய்...அப்படி எல்லாம் போயிடாதே! சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...
என்னமோ பெருசா லா, லா, லா, லு-ன்னு ட்யூனைக் கொடுத்தியே! பாரு நானும் லா, லா, லா, லா ன்னே வச்சி எழுதறேன். அப்போ தெரியும்!
வான் நிலா...நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...

விஸ்வநாதன்: அண்ணே, அடேயப்பா...பாதர் இன் லா, சன் இன் லா, பிரதர் இன லா வைத் தவிர எல்லா லாவும் உள்ளே புகுத்திட்டீங்களே! இவ்ளோ சரக்கை வச்சிக்கிட்டு ஏண்ணே முரண்டு பிடிக்கறீங்க?
கண்ணதாசன்: டேய், உன் கூட நான் விளையாடாம, வேற யார்டா விளையாடப் போறாங்க?


இப்படி லா லா ன்னு வைத்து, இன்னொரு பாட்டும் பின்னாளில் வந்தது!
மெளனம் சம்மதம் படத்தில் இளையராஜா போட்டாரு; ஜேசுதாஸ்-சித்ரா பாடுவாங்க, கல்யாண தேன் நிலா ன்னு!
ஆனா முதல் காதல், என்னிக்குமே முதல் காதல் தானே? என்ன சொல்றீங்க? வான் நிலா நிலா அல்ல - அது போல் வேறு எந்த நிலாவும் அல்ல!

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் மெய்யிலா
பார்ப்போமே ஆவலா வாவா வா நிலா


கடைசியா:
ஜிரா மட்டும் தான் கேள்வி கேட்பாரா? நான் கேக்கக் கூடாதா? :-)
வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க?

Sunday, October 28, 2007

காதல் இன்பம்: Bryan Adams - Everything I do, I do it for you!

நீங்க முதல் முதலில் கேட்ட மேல்நாட்டு இசை என்ன-ன்னு ஞாபகம் இருக்கா? - அதுவும் அதை மிகவும் ரசித்துக் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட முதல் அனுபவம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

பொதுவா எங்க வீட்டுல கேக்கற மீசிக், எப்பமே தமிழ் சினிமாப் பாட்டு தான்!
யாம் அறிந்த இசைகளிலே தமிழ் சினிமா
இசையைப் போல் எங்கும் காணேன்! - ஏன்னா, தமிழ் சினிமாவைத் தவிர அப்ப வேற ஒண்ணும் தெரியாது! :-))

எங்க வீட்டுல எனக்கு அண்ணனும் இல்ல, தம்பியும் இல்ல! அப்போ எல்லாம் வலையுலகத் தம்பிகளும் கிடையாது! அப்பாவை எதிர்த்துப் போராடி நம்ம மீசிக்கை ஸ்பீக்கரில் அலற வுடறதுக்கு சரியான கூட்டணி இல்ல! ஜிஸ்டர் என்னிக்குமே எதிர்க்கட்சி தான்! (சினிமா டிக்கெட் வாங்கும் போது மட்டும், அவளுக்கு நான் சத்குரு! அதுக்கப்புறம் மீண்டும் எதிர்க்கட்சி :-)

அன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க!
(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க!); அவங்க நமக்குப் ப்ராஜெக்ட் மேட்டும் கூட! அவங்க கையில ஒரு சிடி.
இது Bryan Adams-ன்னு ஒருத்தர், கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி போட்ட பாட்டாம்! ரொம்ப உருக்கமா இருக்கு! கேக்கறயா ரவின்னு சொன்னாங்க!

உடனே நமக்குச் சொல்லணுமா?..... இங்கிலீஷ் பாட்டு வேற!
அம்மாவை நான் பார்க்க, அந்தப் பொண்ணும் அம்மாவைப் பார்க்க...பொண்ணு பார்த்ததும் அம்மா ஓகேன்னு சொல்லிட்டாங்க! :-)
வீட்டில் முதல் முறையா, ஃபுல் வால்யூமில், ஸ்டிரியோவுடன்,
Look into my eyes - you will see,.......
What you mean to me......
என்ற அற்புதமான காதல் கவிதை!
Everything I do, I do it for you! என்று ஒவ்வொரு வரியிலும் முடியும்! அப்படியே காற்றில் பறக்கும் மென்பஞ்சு சிறகு போல், அப்படி ஒரு சுகம்!

அன்னிக்கு கேக்க ஆரம்பிச்சது தாங்க!
இசையை மொழி, மதம், நாடு, இனம் எல்லாத்தையும் கடந்து ரசிக்கலாம்-னு அப்பப்ப ஒரு பில்ட்-அப் கொடுத்துட்டு, கேட்டுக்கிட்டே இருந்தாலும்...
முதல் காதல் போல், இந்த முதல் இசையும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது!
இன்றும் என் காரில், இந்தப் பாடலின் சிடி இல்லாமல், பயணம் இருக்காது!

பாட்டையும் வரிகளையும் நீங்களே படிச்சி என்சாய் பண்ணுங்க!
ஒவ்வொரு வரியும் வைர வரிகள்! தனிமையில் கேட்கும் போது காதல் விஞ்ஞானிகளும் கவிழ்ந்து விடுவார்கள்!
எனக்குப் பிடித்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும்-ன்னே நினைக்கிறேன்!
mp3 வேண்டும் என்றால் சொல்லுங்க; upload செய்கிறேன்!




எந்தவொரு காதலுக்கும் இந்தப் பாடலைப் பொருத்தறாங்க. மேலே கண்டது Lord of the Rings-க்கு பொருத்தியது! கீழே ஒரிஜினல் ராபின்ஹூட் வீடியோவும், Bryan Adams அவரே பாடுவதும் கொடுத்துள்ளேன்!

Look into my eyes - you will see
What you mean to me
Search your heart - search your soul
And when you find me there - you'll search no more

Don't tell me it's not worth tryin' for
You can't tell me it's not worth dyin' for
You know it's true
Everything I do - I do it for you

********************************************************
Look into your heart - you will find
There's nothin' there to hide
Take me as I am - take my life
I would give it all - I would sacrifice


Don't tell me it's not worth fightin' for
I can't help it - there's nothin' I want more
Ya know it's true
Everything I do - I do it for you

********************************************************
There's no love - like your love
And no other - could give more love

There's nowhere - unless you're there
All the time - all the way


Oh - you can't tell me it's not worth tryin' for
I can't help it - there's nothin' I want more
I would fight for you - I'd lie for you
Walk the wire for you - ya I'd die for you
********************************************************
Ya know it's true
Everything I do - I do it for you





இது ஒரு காதலன் பாடுவது போல், தன் உள்ளத்தைச் சொல்லும் பாட்டு!
Don't tell me it's not worth fightin' for
Everything I do, I do it for you! என்று சொல்கிறான்!

பாட்டின் பின்னணி கொஞ்சம் பார்ப்போமா?
Waking up the neighbours என்ற ஆல்பத்துக்காக, Bryan Adams எழுதிய பாடல்! இது சூப்பர் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதினாறு வாரங்களுக்கு மேல்...டாப் டென்-னில் நம்பர் ஒன்னாக நின்றதாம்! - பின்னாளில் இதற்கு Grammy Award வேறு கொடுத்திருக்காங்க!
அன்றில் இருந்து, இன்று வரை பல முன்னணிப் பாடகர்கள் இதைப் பாடி இருக்காங்க! - இன்னிக்கும் Brandy குழுவிலும் இதைப் பாடுறாங்க!

ராபின் ஹூட் பற்றிய ஒரு படம், Robin Hood - Prince of Thieves!
அதற்கு பாட்டும் எழுதி, இசையமைத்துப் பாட Bryan Adams-ஐக் கூப்பிட்டாங்க! அவர் நண்பர் Mutt Lange உம் உடன் பாடினார்!
ஆனா அவங்க பாடிய விதம் ஏனோ, அந்தப் படம் எடுத்த கம்பெனிக்குப் பிடிக்காமல் போனது!
மாற்றிப் பாடும் படி எவ்வளவு சொல்லியும், ஆடம்ஸ் பாட்டின் ஜீவனை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்! அதனால் படத்தின் இறுதியில் Cast and Credit -இல் எங்கோ ஒரு மூலையில் ஆடம்ஸ்-இன் பெயரைப் போட்டுட்டாங்க!

ஆனா பாடல் வெளி வந்த பின், நம்பர் ஒன் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ,
ஆடம்ஸ் Cast and Credit -இல் சிறு புள்ளியாய்த் தோன்றினாலும், இசை வானில் பெரும் புள்ளியாய் ஆகி விட்டார்!
முப்பது நாடுகளில் ஹிட்டாகி, 1991-இல் அதிகம் விற்கப்பட்ட தனிப்பாடலாக வளர்ந்தது!
ஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மானிய மொழிகளிலும் பின்னர் ரெக்கார்ட் செய்யப்பட்டது!

References (உசாத்துணை):
http://wc06.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=10:t2jv7iajg74r
http://en.wikipedia.org/wiki/Everything_I_Do




BBC-ராபின்ஹூட்-ஒரு காட்சி


ப்ரையன் ஆடம்ஸ்-இன் லைவ் ஷோ !


பியானோவில், அதே வாசிப்பு!

Thursday, October 25, 2007

தமிழிசை பாடும் வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!

(தமிழிசை...)

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!


(தமிழிசை...)

கடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே?

பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக்கேட்டு தமிழிசையில் திளைத்தபடியே, கொஞ்சம் பொருள் சொல்லுங்களேன்...!

08_SEERKAZHI_Thami...


பாடலை மேலே கேட்க இயலாதவர்களுக்காக சுட்டி இங்கே.

இதுபோன்ற உருக்கமான பாடல்களுக்கு ஏற்ற ராகம் சிவரஞ்சனி. இந்த ராகத்தில் அமைந்த சில திரை இசைப்பாடல்கள்:

இன்னிசை பாடி வரும் காற்றுக்கு (துள்ளாத மனமும் துள்ளும்)
உன்னைத்தானே தஞ்சம் என்று (நல்லவனுக்கு நல்லவன்)
ஒரு ஜீவன் தான் (நான் அடிமை இல்லை)
வா வா அன்பே பூஜை செய்து (அக்னி நட்சத்திரம்)
நான் பாடும் மௌன ராகம் (இதயக்கோவில்)

Thursday, October 18, 2007

தமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா?(உன் தயவில்லையா)?

எனக்கு இசை ரொம்ப பிடிக்கும்!
தமிழில் இசையோ ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
தனிமையில் என்னைப் பிடியாய்ப் பிடிக்கும்!
தவிக்கும் உள்ளத்தில் செடியாய் முளைக்கும்!

நியுயார்க் நகரத்தை ஒட்டினாப் போல இருக்கும் ஆறு, ஹட்சன் ஆறு!
இன்று அலுவலகத்தில் ஒரு நீண்ட.....நெடிய......மீட்டீங்....முடிந்த பின்னர், அடப் போங்கடா... கொஞ்சம் புதுக் காற்றையாச்சும் சுவாசிக்கலாமே என்ற எண்ணம் வந்துச்சு!
அதனால் ஆத்தோரமா காலாற நடந்து கொண்டிருந்தேன். உடனே "ஆத்தா, ஆத்தோரமா போறியா" ன்னு பாட்டை எல்லாம் எடுத்து வுடாதீங்க! :-)

குளிரும் அவ்வளவா இல்லை! வெயிலும், காற்றும் மிதமாய் வீசின!
என் mp3 ப்ளேயரில் அப்ப தான் ஏதோ ஒரு பாட்டு முடிஞ்சு, திடீரென்று ஒரு உருக்கமான பாட்டு துவங்கியது! - "நீ தய ராதா"?

சிந்து பைரவி படத்தில், நம்ம சிந்து, இந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் ஜேகேபி-கிட்டே மொழி மாத்தி, தமிழில் பாடிக் காட்டுவாய்ங்க! அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு! :-))

ஆகா...இது நான் விரும்பிக் கேட்கும் ஜேசுதாஸ் பாட்டாச்சே! கொஞ்ச நேரம் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டேன்!
பொருள் லேசாகத் தெரிஞ்சாப் போலத் தான் இருந்திச்சு! ஆனா அதை விட, சூழ்நிலைக்கு அந்தப் பாட்டு ரொம்ப பொருத்தமாய், இதமாய் இருந்துச்சு!

ஏன்னா, நெருங்கிய நண்பருடன் சண்டை! ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை! சாட்டவும் இல்லை! நடுவில் ஒரு முறை அழைத்துப் பார்த்த போது, நண்பர் கொஞ்சமும் கோபம் தணியாமல் (இல்லையில்லை...ஒரு விதமான செல்லமான உரிமையில்....), தொலைபேசியை கட் பண்ணி விட்டார்! :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம்? - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே! போதும்-டா, நிறுத்திக்கோன்னு! சொல்லலாம்!

ஆனா தியாகராஜர் வேற மாதிரி சொல்லுறாரு!
ஸ்ரீராமனே! உனக்குத் தயவே இல்லையா? உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ? அப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு!
மன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, தலையில் ஒரே தட்டா தட்டறாரு!:-)



இந்தப் பாட்டை நம் கொஞ்சு தமிழில் கேட்டா எப்படி இருக்கும்-னு உடனே தோணிச்சி!
அமெரிக்கா வந்த புதுசுல, பொழுது போகாம, இது போல ஏற்கனவே சில பிரபலமான கீர்த்தனைகளை, சும்மானாங்காட்டியும் தமிழில் ஆக்கி வைச்சிருந்தேன்!
ஒலிப்பேழையில் ஜேசுதாஸ் பாடப்பாட, நானும் அவர் கூடவே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே நடந்து கொண்டிருந்தேன்!

ஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க!
நான் தான் இசையின் போதையில் இருந்தேனே! பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை!

தெலுங்குப் பாட்டையும், தமிழ் ஆக்கத்தையும் கீழே கொடுத்திருக்கேன்! பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க!
தமிழில் ஆக்கும் போது, அதே ராகமும் மெட்டும் அப்படியே வரவேண்டி இருக்கு; அதனால் தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே சற்று மாற்றி அமைக்க வேண்டி இருக்கு!
தியாகராஜரின் தெலுங்கோ, மக்களின் பேச்சுத் தெலுங்கு! அதனால் தமிழ் செய்யும் போது, அதே எளிமை வந்தா தான் இன்னும் நல்லா இருக்கும்!

இதோ...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிச்சீங்கன்னா, தியாகராஜர் என்ற இசைக் கடலின் சுவையில் நீங்களும் கிறங்கிப் போயிடுவீங்க!
உங்களுக்கு எது விருப்பமோ, அதைக் க்ளிக்கி கேளுங்க!.....நான் விரும்பியது நித்யஸ்ரீ மற்றும் சுசீலாம்மா பாடுவது...
* சிந்து பைரவி-யில் ஜேசுதாஸ் பாடுவது
** சுசீலாம்மா, ஒரு தெலுங்கு படத்தில், கொஞ்சம் ஜனரஞ்சகமாப் பாடுவது

* நித்யஸ்ரீ பாடுவது
** N.C. வசந்த கோகிலம் பாடுவது
*** வீணையில், காருக்குறிச்சி சகோதரர்கள்

ராகம்: வசந்த பைரவி
தாளம்: ரூபக தாளம்
பாடல்: நீ தய ராதா
வரிகள்: தியாகராஜர்


பல்லவி
(நீ தய ராதா...ராமா...நீ தய ராதா)
உன் தயவில்லையா?...ராமா...உன் தயவில்லையா?

அனுபல்லவி
(காதென வாரு எவரு...கல்யாண ராமா)
தடுப்பது யார் எவரோ?...கல்யாண ராமா...!!

சரணங்கள்
(முதல் இரண்டு பத்திகள் அவ்வளவா யாரும் பாடுவதில்லை...அதனால படிச்சிட்டு, ஸ்கிப் பண்ணிடுங்க...ஆனா பி.சுசீலா மட்டும் முழுவதுமே பாடுறாங்க...)

(நன்னு ப்ரோ-சுவர் இலனு நாடே தெலிய
இன வம்ச திலகா நீக்கு இந்த தாமசமா)

காப்பவர் யாருமிலை என்று, முன்பே தெளிந்தனனே!
கதிரவ குல திலகா, இனியும் உனக்குத் தாமதமா?


(அன்னித்திக்கு அதிகாரி வாநீ - நீனு பொக டித்தே
மன்னிஞ் சிதே நீது மகிமக்கு தக்கு வா)
அனைத்தும் நின் பொறுப்பே - உன்றன் கண்ணியம் குறைபடுமோ?
மன்னித்து அருளாயோ - உன்றன் மகிமையும் குறைபடுமோ?

(ராம ராம ராம தியாக ராஜ ஹ்ருத் சதனா
நாமதி தள்ளதில்லகா நியாயமா வேகமே)

ராம ராம ராம, தியாக - ராஜ மன வாழ்வே
என்மதி தள்ளாடக் கண்டும், நியாயமா? வா வேகமா(ய்)!

இது போல வேறு சில கீர்த்தனைகளையும் அவ்வப்போது இசை இன்பத்தில் அதே மெட்டு வராப்போலக் கொடுக்கலாம்-னு எண்ணம்! இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம்! தியாகராஜரின் முன்னால் அடியேன் முயற்சி வெறும் கால் தூசி தான்!

உள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை! - இசையை மட்டும் ஹம் பண்ணி லயித்து விடலாம்!
பாட்டை, வீணையிலோ வயலினிலோ கேட்கும் போது, மொழி வந்து முன்னே நிற்கிறதா என்ன?

ஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,
மனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா?
பொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது! கரைகிறது!வீணையிலோ வயலினிலோ ஒலியாய் கேட்கும் போது கூட, உணர்ந்து உணர்ந்து, கூடவே பாடுகிறது!

பாருங்க...இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது கூட, உன் தயவில்லையா-ன்னு பாடிக்கிட்டே தான் இருக்கேன்! அப்போ நீங்களும் ஹம் பண்ணத் துவங்கியாச்சா?
நீ தய ராதா...ராமா...நீ தய ராதா!

Friday, October 05, 2007

ஆபோகியில் அகமுருகி

ஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.

தமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:

தங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்


thangarathamvantha...


காலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா



இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா



இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.

திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.

முதலில்:
சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்
Sabapathikku.mp3


மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:


கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!

தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!

கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.

தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.

கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.

என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்?
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?

அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்
அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

அதுவும் "ராமா நீ சமானம் எவரு?" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே!
பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்!


அடுத்ததாக:

நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்
03 Nekkuruhi-Main....


இந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ!

இந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக -


ரீ ரி க ம க ரி ஸா - ரி க மா மா

த ஸ் த த மா - க ம த ஸ்ா

ரி ஸ்ா ம க ரி ...

நீங்களே கேட்டுக் களியுங்கள்:



Nekkuruhi-Swarams....

Thursday, September 27, 2007

சாருகேசியின் மன்மத லீலையும், Jazz Fusion-உம்!

எவன் டா அவன் சாருகேசி?
அடப் பாவி...இது தெரியாதா உனக்கு? உன்னால் முடியும் தம்பி படம் பாத்துக்கீறயா நீயி? அதுல கமலுக்குப் போட்டியா ஜெமினி கிட்ட சிஷ்யனா சேந்துக்கிட்டு, கமல் தங்கச்சியவே டாவடிப்பானே! அவன் பேரு தான் மச்சி சாருகேசி!

அட அவனுக்கும் Jazz Fusionக்கும் என்னா சம்பந்தம் டா? டேய் வாணாம்! பிட்டு போடறத நிறுத்திக்கினு ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வா மாமே! சாருகேசி ராகத்த தான சொல்லற நீயி?
ஆமா, இவரு அப்படியே ராகத்தை எல்லாம் ஒன்னாக் கலந்து ராவா அடிச்சவரு! பேச வந்துட்டான்! சொல்றத கேள்றா!

ஜாஸ் மீசிக் பத்தி நம்ம சிவிஆரு ஒரு பதிவ போட்டாரு எப்பாலியோ!
ஆனா அதே ஜாஸ்-ஐ நம்மூரு மீசிக்-ல கலந்து, சாக்ஸோபோன்-ல நம்மூரு பையன் ஒருத்தன் வாசிக்கறான். சான் பிரான்சிஸ்கோவுல இருக்குறான். பிரசாந்து-ன்னு பேரு! நம்ம கே.ஆர்.எஸ் ஃபிரண்டு தானாம்! இலவச டிக்கெட் எதுன்னா கெடைக்குமான்னு கேட்டு வையி!
அவன் கூட சேர்ந்துக்குனு, டேவிட் ஈவெல்-னு ஒரு அமெரிக்கா காரன் Bass வயலின்-ல, நம்மூரு சாருகேசிய வாசிக்கறான்!

அடங்கொக்க மக்கா...சார்லஸ் கேசின்னு நினைச்சிருப்பான் போல சாருகேசிய!
டேய், சாருகேசின்னா ஒனக்கு அவ்ளோ கேவலமாப் போயிடுச்சா? சாருகேசி உலகம் பூரா இருக்கு! தெரியும்-ல? கர்நாடிக், ஹிந்துஸ்தானி ரெண்டுத்தலேயும் இருக்கு!
ஒரு காலத்துல இது எவ்ளோ பெரீய்ய்ய்ய் ஹிட்! மன்மத லீலையை வென்றார் உண்டோ - இது சாருகேசி தான்! இதைப் பாடாதவன்னே எவனும் கிடையாது!
சரி நம்ம ஜாஸ் மீசிக்குக்கு வருவோம்! Where Jazz meets Carnaticன்னு ஒரு தீம் வச்சிக்கிட்டாங்க பசங்க! அவங்க குழுவின் பேர் vidyamusic

Where Jazz meets Carnatic


பிரபல Sax கலைஞர் கத்ரி கோபால்நாத்-பிரசாந்த்


இளமைத் துடிப்புக்கு ஜாஸ்! அதில் மெலடிக்கு தென்னாட்டு இசை!
புதுசு புதுசாய் மெட்டுக்கள், Fusion மற்றும் மரபு இசை - ரெண்டுமே தராங்க.
இதுல டேவிட் = பெரிய ஆளுயர Bass வயலின்.
கவுதம் = ரெகுலர் வயலின்.
சமீர் = டிரம்ஸ்.
பிரசாந்த் = சாக்ஸபோன்.
கீழே சாருகேசிய Fusion-ல அற்புதமா வாசிக்கறாங்க! Million Fishes Artist Collective என்ற நிகழ்ச்சியில் வாசித்தது. கேளுங்க, பாருங்க!





சாருகேசின்னாலே இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி. நல்ல வெரைட்டி கொடுக்க முடியும். ராஜா, ரகுமான் ரெண்டு பேருமே சாருகேசியில் பூந்து விளையாடி இருக்காங்க.
சின்னத் தாய் அவள் பெற்ற ராஜாவே - தளபதி


உதயா உதயா - உதயா (ஹரிஹரன்-சாதனா சர்கம் பாடுவது)


காதலா, காதலா - அவ்வை சண்முகி


ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீ ராகவேந்திரா
இதுல சாருகேசி ராகத்தின் பேரைச் சொல்லி அபிநயம் பிடிக்க முடியாமல் செய்து, அம்பிகாவைப் போட்டியில் ஜெயிப்பாரு நம்ம தலைவரு!


பண்டிட் ரவிசங்கர் சிதார் இசையில் சாருகேசி



அட சாரு சாரு என்ன வேணும்னாலும் சொல்லுங்க சாரு. சாருகேசி-ன்னா அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்கும், இது ரெண்டு தான் சாரு!
ஆட மோடி கலதே - தியாகராஜர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

போன வாட்டி நளினகாந்தி போட்டோம்ல, அதான் இன்னிக்கி ஒரு ஆம்பள ராகம் - சாருகேசி!
அடுத்த தபா, கட்டாயம் ஒரு கட்டழகு விளையாடும் கன்னிப் பொண்ணு ராகம் தேன்! அதுவரை வர்ட்டா ஸ்டைலில், வரட்டா? :-)

Wednesday, September 19, 2007

சினிமா இசையில் வாத்தியமா? குரலா?? - உன்னி கிருஷ்ணன் நேர்காணல்!

1. சினிமா இசையில், வாத்திய இசை மிகுந்து, குரல் இசை படுத்து விட்டதா?

2. இளையராஜா, ரஹ்மான் - யாருக்கு கர்நாடக இசை அதிகமாகத் தேர்ச்சி?

3. நளினகாந்தி ராகத்தில் பாடிய இருவர் படத்தின் பாடல் எது?

4. சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிடம் ஓடாத வருடம்
- என்ன ராகம்?

5. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - பாட்டின் ஜீவன் வரிகளா? இசையா? குரலா??

6. கர்நாடக சங்கீதத்தை பொது மக்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்வது சினிமா தானே? - என்னவளே அடி என்னவளே,...காதல் என்றால் பெரும் அவஸ்தை என்றுன்னைக் கண்டதும் கண்டு கொண்டேன்!



இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் என்ன?
உன்னி கிருஷ்ணனைச் சந்தித்து உரையாடுகிறார் N.முருகன், இ.ஆ.ப. (I.A.S)
நன்றி: IndiaInteracts.com

(ஆடியோ தரம் அப்படி ஒன்றும் இல்லை. இருப்பினும் உன்னி ஹம் செய்யும் பாடல்களைக் கேட்பதற்காகவே பார்க்கலாம். ஐந்து பகுதிகள், ஒவ்வொன்றும் சுமார் 5 நிமிடம்; முதல் வீடியோ மிகவும் நல்லா இருக்கு!)
பாருங்க. உன்னியின் பிடித்தமான கருத்தைப் பின்னுட்டமாச் சொல்லுங்க! (பார்க்காதவர்கள் வசதிக்காக....)











என்னவளே அடி என்னவளே



நறுமுகையே, நறுமுகையே

Sunday, September 09, 2007

பீமா படப்பாடல்கள் விமர்சனம்

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு என்றுமே ஒரு தனி தரம் உண்டு. தொடர்ந்து வெற்றிகரமான இசை வழங்குவதில் ஹாரிஸின் திறமை அலாதியானது. அவரின் இசையில் சமீபத்தில் வெளியான "பீமா" திரைப்படப்பாடல்கள் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா??

எனதுயிரே:
சாதனா சர்க்கமின் இனிமையான குரலில் அழகாக தவழும் பாடல். சமீபத்தில் வெளியான "கிரீடம்" படத்தில் வரும் 'அக்கம் பக்கம்" பாட்டை போல அருமையான மெலடி பாடல். பாடலில் வரும் நிகில் மாத்யூவின் ஆண் குரலும் பாடலுக்கு நயம் சேர்த்து நம்மை குழைய வைத்துவிடும்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)



முதல் மழை:
வழமையான ஹாரிஸ் பாடல் என்று கேட்க ஆரம்பித்தவுடன் தெரிந்து விடுகிறது. ஆரம்ப ஹம்மிங் மற்றும் தாளம் எல்லாம் கேட்கும் போதே காலம் காலமாக நாம் கேட்டு வந்த ஹாரிசின் பல பாடல்கள் மனத்திரையில் ஆரசல் புரசலாக தோன்றி மறைகிறது. சிறிது நேரத்தில் மனதை அமைதி படுத்திவிட்டு நாம் இசையை இரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். கேட்க கேட்க இனிமை கூடும் பாடல்களின் இரகத்தில் இந்த பாடலை கட்டாயமாக சேர்க்க்கலாம்.ஹரிஹரனின் மயக்கும் குரலுடன் சேர்ந்து மற்ற பாடகர்களும் இசைக்கு அழகு சேர்ப்பது இப்பாடலுக்கு சாதகம்.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ஒரு முகமோ:
பாடலை கேட்க ஆராம்பித்த உடன் என்னையும் அறியாமல் ஒரு ஆங்கில பாடல் தான் ஞாபகம் வந்தது.க்வீன்் எனப்படும் ஆங்கில பாடற்குழுவின் "We will rock you " பாடல் தான் அது.
பாடலை நிங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்.



ஆனால் என் நண்பர் வேறொரு பாடல் ஒன்றை அளித்து இதையும் கேட்டுப்பார் என்று சொன்னார்.

முதல் பாடலை விட இந்த பாடல் சற்று அதிகமாகவே ஒத்துப்போனது

முதல் பாட்டு கேட்டால் காபி என்று சொல்ல முடியாது ஆனால் கண்டிப்பாக இன்ஸ்பயர் பண்ணப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது,ஆனால் இரண்டாவது பாட்டை கேட்டவுடன்......
நீங்களே யோசித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்!! :-)
நரேஷ் ஐயர் தனக்கே உரித்தான உணர்ச்சிப்பூர்வமான குரலில் உருகி உருகி பாடியிருக்கிறார்.குரல்களின் விளையாட்டுடன் பலதரப்பட்ட கோரஸ்களோடு சேர்ந்து பாட்டு அமர்களமாக முடிகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரகசிய கனவுகள்:
கேட்ட வுடன் திரும்பவும் இந்த பாட்டினால் இன்ஸ்பயர் ஆகி இருக்கலாம் என்று தோன்றியது.இந்த பாட்டின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினால் ரஹமானின் ஹிந்திப்பாட்டினை போலவே இருந்தது!! பாடல் சுமார் ரகம். கேட்க கேட்க பிடித்துப்போகும் ரகம். நடுவில் மிக அழகான வயலின் மற்றும் சாரங்கி இசை பயன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மதுஸ்ரீயின் சற்றே கொச்சை தமிழின் எதிரில் ஹரிஹரனின் கம்பீரமான குரலும் ஸ்பஷ்டமான உச்சரிப்பும் தனியாக நிற்கிறது.பாடலின் கடைசியில் மிக அழகான நாதஸ்வர பயன்பாடு.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


சிறு பார்வையாலே:
பாட்டு கேட்க ஆரம்பித்தவுடனே சிவாஜி படத்தின் "பூம்பாவாய்" பாடல் பளிச்சென ஞாபகம் வந்தது!! பாடலின் தாளம்,மெட்டு இரண்டுமே அந்த பாட்டை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது். சிறிது நேரம் கழித்து தான் "செல்லமே" படத்தின் இந்த பாட்டு எனக்கு தோன்றியது. இரண்டு பாடலிலும் வரும் ஆண் குரலும் ஆலாபனைகளும் இந்த இரண்டு பாடல்கலின் ஒற்றுமையை உயர்த்திக்காட்டுகிறதா என்று தெரியவில்லை.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)


ரங்கு ரங்கைய்யா:
"ரோஜா கூட்டம்" படத்தில் வரும் "சுப்பம்மா சுப்பம்மா" பாடலால் ஆரம்பம் இன்ஸ்பயர் ஆகியிருக்கிறது என்று கேட்டவுடன் தெரிந்தது. மற்றும் பல குத்துப்பாட்டு அம்சங்களும் சேர்த்து ஒரு ஐடம் பாடலை தேர்த்த முயன்றிருக்கிறார் இசை அமைப்பாளர். பாடல் அவ்வளவாக என் மனதில் ஒட்டவில்லை. படத்தில் சிகரெட் பற்ற வைக்க எல்லோரும் எழுந்து போகும் பாடலாக இது அமையும் என்று பட்சி சொல்லுகிறது.

நீங்க என்ன நினைக்கறீங்க??? :-)



ஒரு படத்துக்கு இசை அமைப்பது என்பது கடினமான செயல். அதுவும் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் முன் கேட்ட பாடல்களின் சாயல் ஏதாவது புதிதாக போடப்படும் பாடல்களில் தெரிவது வியப்பல்ல. ஆனால் அது போல இல்லாமல் தனித்துவத்துடன் விளங்கும் பாடல்கள் தான் காலத்தை கடந்து என்றும் பசுமையாக நினைவில் நிற்கும் என்பதை நாம்் பார்த்திருக்கிறோம்.
பீமாவின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் ,ஒண்றிரண்டு பாடல்கள்் இனிமையாகவே இருந்தாலும் கூட தனித்துவமாக இல்லாததால் அடுத்த வருடமே மனதிலிருந்து் மறைந்துவிடும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்து என்ன??? ;)



Friday, September 07, 2007

நறுமுகையே நறுமுகையே - நளினா நீ கொஞ்சம் நில்லாய்!

மிக மிகப் பழங்காலத் தமிழ்; சங்க இலக்கியப் பாடல்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா? ஆடியன்ஸ் கல்லெறிவார்களே!
சரி, அதை சுரங்களோடு கர்நாடக மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!

டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி. காலேஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாரும் இந்த ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா.
சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு!
இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு அவிங்க ரொம்பவே மரியாதை காட்டுனானுங்கப்பா!

எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தானாம்!
அப்படி என்னடா மச்சி இந்தப் பாட்டுல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?
வரிகளா? இசையா? குரலா? எதுடா, எது? எது?
உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு தானே!
இருவர் படத்தில், ரஹ்மான் கொடுத்த மாஸ்டர் பீஸ்!

என்னாது ரகுமானா? பொதுவா இந்த மாதிரி கர்நாடிக் மெட்டு எல்லாம் நம்ம மொட்டை தானடா கலக்குவாரு!
நல்லாத் தெரியுமா? இசை ஞானி இளையராஜாவா இருக்கப் போவுது!
ச்சே ச்சே! நிச்சயமா ரகுமான் தாண்டா!
ராஜா இதுல பெரிய பிஸ்து தான். ஆனா அங்கொண்ணுமா, இங்கொண்ணுமா ரகுமான் கொடுத்த கர்நாடிக் மாஸ்டர் பீசுல இதுவும் ஒன்னுடா!



ஆமாண்டா மாப்ள, எழுதியவரு யாரு? - நம்ம கவியரசர் வைரமுத்து தானே!
அதுல என்னடா சந்தேகம்! அவரே தான்!
சும்மாவே அமீபா, நோக்கியான்னு இங்கலீஷ் வார்த்தைகளை நேச்சுரலா தமிழோட கலந்து அடிப்பாரு! அவருக்குத் தூய தமிழ்ல இப்படிப் பாட்டு போடக் கசக்குமா என்ன?
இதுல வர சில வரிகளைச் சங்கத் தமிழ் பாட்டுல இருந்து அப்படியே வரி மாத்தாம கொடுத்திருக்காருடா!

அதுவும் "யாயும் யாயும் யார் ஆகியரோ - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல" என்று வருது பாரு!
அது...குறுந்தொகை-ன்னு ஒரு பழம் பெரும் இலக்கியப் பாட்டுல இருந்து எடுத்துக்கிட்டாரு மனுசன்.
அதை எழுதனவரு பேரே செம்புலப்பெயனீரார்-னு சொல்லுவாங்களாம்!

ஹூம்...லேசா ஞாபகம் வருதுடா! இதே பாட்டைத் தான் நான் சாய்ஸ்-ல வுட்டேன் ப்ளஸ்டூ-ல!
ஹூம்...நேரம் பாத்தியா! அப்ப "சாய்ஸ்" ல வுட்ட!
இப்ப, பெப்சி உங்கள் "சாய்ஸ்"-ல அதையே கேட்டு கேட்டு வாங்கற!


பாடறவன் இருக்கானே, அவனும் ஒன்னும் சும்மா இல்லடா! உன்னி கிருஷ்ணன்! சொல்லவே வேணாம் - மெலடி மன்னன்.
அவன் கண்டி நம்ம காலேஜ்-ல இப்ப படிச்சான்னு வையி...ஒரு பிகரு நம்மள பாக்காதுங்க!
அது என்னமோ கரெக்டு தான்டா! குரலுக்குக் குரல், கொஞ்சும் குரல் வேற! சொல்லணுமா நம்ம பொண்ணுங்களுக்கு!
கூடப் பாடினது பாம்பே ஜெயஸ்ரீ. அந்த அம்மா கொஞ்சம் அடர்த்தியா பாடுவாய்ங்க! இதுல நல்லாத் தான் குழைஞ்சு பாடி இருக்காங்க!

சரி, அது என்னமோ ஒரு ராகம் சொன்னியே! இன்னாது - சூரிய காந்தியா?
டேய் டொக்கு! அது சூரிய காந்தியும் இல்ல, இந்திரா காந்தியும் இல்ல! அது பேரு நளின காந்தி டா! அந்த ராகத்துல தான் இந்தப் பாட்டைப் போட்டிருக்காங்க!

ஒங்க கொக்கா மக்க! ஒனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? பாட்டு க்ளாஸ் பத்மா டீச்சரைக் கணக்கு பண்றியே, அந்த எக்ஸ்பெரீயன்ஸா?
அடப்பாவி! இது இசை இன்பம் பதிவுல, அந்த பாட்டுக்காரப் பையன் CVR சொன்னதுடா மச்சி!
சரி வா, நாம பாட்டைப் பார்க்கலாம்! ராகம், போகத்துக்கெல்லாம் அப்பறம் வரலாம்!

பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்க, இங்கே!
பாடலைப் பொருளோடு அனுபவித்துக் கேட்கும் போது, ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது. அதான் சற்றே கடினமான சொற்களுக்கு மட்டும் விளக்கம். மத்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன?

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
(முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு;
என்ன அரும்பு? மல்லிகையோ, இருவாட்சியோ...காதலர்களுக்குத் தான் தெரியும்!
ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள் என்பது கணக்கு.

செங்கனி ஊறிய வாயா? - அது எப்படி கனி ஊறியதுன்னு தெரியும்? என்ன கனி? முக்கனியா?
அடப் போங்க, நான் சொல்ல மாட்டேன். ஒரே வெட்கமா இருக்கு :-)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)
(அற்றைத் திங்கள் = அந்த மாதம்;
தரளம்=முத்து; நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய;
பொய்கை=குளம்; கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்

(புரவி=குதிரை)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா?

(அற்றைத் திங்கள் அந்நிலவில்)


மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்தது என்ன!
பாண்டி நாடனைக் கண்டு
என்உடல் பசலை கொண்டது என்ன!
(பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்; பார்த்தவுடனே சொல்லிடலாம் இது காதல் தான் என்று!
இப்பவெல்லாம் இந்தப் பசலை யாருக்காச்சும் வருதா தெரியலையே! நீங்க யாரையாச்சும் பார்த்திருக்கீங்களா? :-)
ஒரு வேளை இந்தக் காலத்தில் பொண்ணுங்களை விட்டுவிட்டு, பசங்களுக்கு மட்டும் தான் பசலை வருதா என்ன? :-)


நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இறுக்கவில்லை

(நறுமுகையே நறுமுகையே)

(மேகலை = ஒட்டியாணம் போன்ற ஆபரணம். பெண்கள் இடுப்பில் அணிவது; ஏழு அல்லது எட்டுக் கோர்வை இருக்கும். இழுத்துக் கட்டலாம் ஒரு பெல்ட் போல; இடையில் மேகலையை இறுக்கிக் கட்டக் கூட முடியாத அளவுக்கு அவள் மெலிந்து போய் விட்டாளோ!)

யாயும் யாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?

(யாய்=தாய்; எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் )

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்தது என்ன!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்தது என்ன!

(செம்புலம்=செம்மண் பூமி; செம்மண்ணில் சேர்ந்த நீர் போல ஒன்னா மிக்ஸ் ஆனது நம்ம காதல்!)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் - நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா



படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து


இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறுந்தொகை, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதாண்டா பொருள்!

சூப்பர்டா மச்சி! பாட்டுக்குப் பொருளை, இந்த மாதிரியே எக்ஸாம்-ல எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :-)
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவுன்னு பாட்டு வருமே, அதுல கூட
"செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் கூட இதே பொருள்-ல பாடியிருக்காருடா!

டேய், போதும் போதும்! ஒத்துக்கறேன்!
ஒனக்குக் கூட கொஞ்சம் இசை ஞானம் இருக்குடா மச்சி!
இசை இன்பம் மேனேஜர் CVR கிட்ட சொல்லி ஒன்னையும் அந்த வலைப்பூவில் சேத்துக்கச் சொல்றேன்! போதுமா?


நளின காந்தி என்பது அருமையான ராகம். பேருக்கு ஏற்றாற் போல் அப்படி ஒரு நளினம்!
அந்த ராகத்தில் சில பாடல்கள், இதோ உங்கள் செவிகளுக்கு!

எந்தன் நெஞ்சில் நீங்காத...தென்றல் நீ தானா?


மனம் விரும்புதே உன்னை - உன்னை


தியாகராஜரின் மனவயால கிஞ்சன என்ற நளினகாந்தி கீர்த்தனை - மாண்டலின்


லயதரங்கா என்னும் வாத்தியக் குழு (Band), நளினகாந்தியைப் போட்டி போட்டு வாசிக்கறாங்க! இங்கே கேளுங்க!

என்னாங்க, நளினாவை நளினமா ரசிச்சீங்களா?
அடுத்த பதிவில் இன்னொரு ஃபிகரை ரசிக்கும் வரை...
"வர்ட்டா" ஸ்டைலில் வரட்டா? :-)

Sunday, August 26, 2007

இசை விளையாட்டு விளையாடலாம் வரீங்களா?

வணக்கம் மக்களே!!
ஒரு சுவையான இசை விளையாட்டோட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!

நாம பாட்டு கேக்கும் போது பாட்டின் நடுவில் வரும் இசையை ரசித்திருக்கிறீர்களா?? பல பாட்டுகளில், பாட்டு ஆரம்பித்து இசையை நாம் உள்வாங்கி சுவைக்க ஆரம்பிக்க, இந்த இடையில் வரும் இசை பாட்டின் தடத்தை நம் மனதில் திடமாக பதித்து விடும். பல இசையமைப்பாளர்களுக்கு தன் திறமையை நிரூப்பிக்க இந்த நடு பகுதிதான் வசதியான ஆடுகளம். அழகான மெட்டுகளில் பல்வேறு இசைகருவிகளின் இனிமையான இசையை கோர்த்து நம் ரசனைக்கு விருந்து படைத்து விடுவார்கள்.

இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் விளையாட்டும் இந்த நடுப்பகுதி சம்பந்தப்பட்டதுதான்!!

நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் தமிழ் சினிமாவிலிருந்து ஐந்து பாடல்களின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி உங்கள் முன்னே படைத்திருக்கிறேன். அதை கேட்டு எந்த பாடல் என்று நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். எனக்கு என்னமோ நீங்கள் நொடிகளில் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தான் தோன்றுகிறது!!!
ஆனால் ஒவ்வொரு பாடலும் நான் பெரிதும் விரும்பி கேட்கும் இசை,அதுவுமில்லாமல் உங்களுக்கு இது சுவையான விலையாட்டாகவும் இருக்கும்!

கேட்டுதான் பாருங்களேன்!! கேட்டு விட்டு விடைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
முடிவுகளை நான் நாளைக்கு அறிவிக்கிறேன்!! :-)

பிற்சேர்க்கை
---------------
இந்த பதிவை இடும்போது மிக சுலபமாக எல்லோரும் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்தேன்!! ஆனால் உங்கள் திறமைக்கு சவாலாகவும்,இனிமையான இசையை உங்கள் மனதில் உலவ ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த போட்டி அமைந்ததில் மகிழ்ச்சி.
அடுத்த முறை பாடலின் கொஞ்சம் சுலபமாகவும் மேலும் சுவை கூட்டவும் முயற்சிகள் செய்கிறேன் (அதற்கான உங்கள் யோசனைகளை தயவு செய்து பின்னூட்டவும்)
விடைகள் இதோ!! :-)

பாடல் 1


விடை:
படம் - உள்ளம் கேட்குமே
பாடல் - என்னை பந்தாடப்பிறந்தவனே....


----------------------------------------------

பாடல் 2


விடை:
படம் - உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் - பச்சைக்கிளி முத்துச்சரம்....


----------------------------------------------

பாடல் 3


விடை:
படம் - ஆலயமணி
பாடல் - தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே....


----------------------------------------------

பாடல் 4


விடை:
படம் - சூரசம்ஹாரம்
பாடல் - நீலக்குயிலே....


----------------------------------------------

பாடல் 5


விடை:
படம் - சங்கமம்
பாடல் - முதல் முறை....


----------------------------------------------

விடைகள் அளித்த அனைவருக்கும் நன்றி (Gtalk-இல் மட்டும் விடையளித்தவர்களையும் சேர்த்து!! :-))

சகாதேவன் - 3ஆவது கேள்வி

முத்துலெட்சுமி - 2 ஆவது,5 ஆவது படம் மட்டும் சரியா கண்டு பிடிச்சாங்க,ஆனா பாட்டு தப்பு!! :-)

பாலராஜன் கீதா - 2 மற்றும் 3 ஆவது கேல்விகளுக்கு சரியான விடை அளித்தார், 3ஆவது கேள்விக்கு படத்தின் பெயரை தவறாக குறிப்பிட்டிருந்தார்

ப்ளாகேஸ்வரி - முதல் கேள்விக்கு மட்டும் சரியான விடை

G3 - 1,2 மற்றும் 5ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

K4K - 1 மற்றும் 5 ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

CDK - 1 மற்றும் 2ஆவது கேள்விகளுக்கு சரியான விடை

மை ஃபிரண்ட் - 1,2 மற்றும் 5

தம்பி - 1 மற்றும் 5

ஜிரா - 2 மற்றும் 3

அனானி - 4
கடைசி வரைக்கும் யாராலையும் 4 ஆவது கண்டு பிடிக்க முடியலையே என்று நினைத்த போது ,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து சரியான விடையை சொன்ன அனானி நண்பர் நம் கவனத்தை பெறுகிறார்.
:-)

இது தவிர இசை இன்பம் அன்பர்கள் கே.ஆர்.எஸ் மற்றும் ஜீவாவின் பதில்கள் இதோ

கே.ஆர்.எஸ் - 1,2,3,5 (இது தான் டாப் ஸ்கோர்!! :-))
ஜீவா - 1ஆவது பாட்டுக்கு சரியான விடை!!

பங்கு பெற்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!! :-)

Thursday, August 02, 2007

நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)

எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை கேட்ட பின் முன்பு எப்பொழுதோ எம்.எஸ்ஸின் தெய்வீக குரலில் இந்த பாட்டை கேட்ட ஞாபகம் வந்து விட்டது.
கே.ஆர்.எஸ் அண்ணாவின் கருணையால் இணையத்தில் அதற்கான ஒலிப்பேழை கிடைத்தது. அதை திரும்ப திரும்ப கேட்க கேட்க இவ்வளவு அழகான பாடலை நம் இனிய தமிழில் கேட்டால் என்ன என்று தோன்றியது!!! எனக்கு தெரிந்து இந்த பாட்டிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியாது. அதுவுமில்லாமல் எனக்கு தெலுங்கு வேறு தெலுசு லேது!! :-(
என்ன செய்வது????

சகலாகலா வல்லவர் கே.ஆர்.எஸ் அண்ணாவையே திரும்பவும் துணைக்கழைத்தேன். எனக்காக மெனக்கெட்டு இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தார். அதை பார்த்ததில் இருந்து மனதில் ஒரே குஷி. வீட்டிற்கு வந்ததில் இருந்து வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை திரும்ப திரும்பக்கேட்டு கீர்த்தனையில் மூழ்கியே போய் விட்டேன்.
அந்த மூடில் பிறந்தது தான் கீழே நீங்கள் பார்க்கும் அடியேனின் மொழிபெயர்ப்பு. பாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் பொருளுக்கு பொருந்தியும் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து எழுதியதால் ஆங்காங்கே வட மொழி சொற்கள் வருவதையும்,வேறு சில விட்டுக்கொடுக்கல்களையும் தவிர்க்க முடியவில்லை (Some compromises had to be made).

வரிகளை படிக்கும் போது எம்.எஸ்ஸின் இந்த ஒலி கோப்பை கேட்டுக்கொண்டே படித்தால்,கீர்த்தனையின் சுவையை ரசிக்கலாம்.

பாம்பே சகோதரிகளின் குரலில் அமைந்த ஒலிப்பேழையும் உங்களுக்காக உண்டு!!

பாட்டில் இரண்டாவது பத்தி ஒலிப்பேழையில் பாடப்படவில்லை என்பதால் பாட்டு கேக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு மூன்றாவது பத்திக்கு நேரடியாக தாவி விடுங்கள்!! :-)

ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : அன்னமாச்சாரியா


நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ?
கண்களில் மறைவது பேரின்பமோ!!

பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??
எதிரினில் விரிவது, பிரபஞ்சமோ
கடைசியில் கை சேரும் பேரின்பமோ

உண்ணும் உணவும்,உடுத்திடும் உடையும்
இதன் இடை இவண் பணி நாடகமோ!!??
இதில் தோன்றும, இடர் தரும் உபயகர்மங்களும்
இவை தாண்டி இறை சேர்ந்தால்,பேரின்பமோ

தங்கும் பாவமும்,தீராத புண்யமும்
நகைக்கிற காலமும் நாடகமோ
எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனை அன்றி
எது தரும் குறைவில்லா,பேரின்பமோ.

Saturday, July 28, 2007

அன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று

அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ? அகிலம் முழுமைக்கும் அன்னையாம், அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும் உலகத்தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ? அவள் குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்கா விட்டாலும், அவர்களிடம் அவள் அன்பு என்றென்றும் குறைவதில்லை.

அழும் பிள்ளையாம் திருஞான சம்பந்தனக்கு ஒடிவந்து பாலூட்டிய அன்னை அவள்! இசையால் என் பிள்ளை அம்புலி புனையும் பெருமானைப் பாடித் துதிப்பான் என அன்னை அறிவாளன்றோ! - மதுரையில் மீனாட்சியாய், காஞ்சியில் காமாட்சியாய், காசியில் விசாலாட்சியாய் - அவள் தானே இட பாகத்தே வீற்றிருக்கும் உமையன்னை!

உயர் ஞானம் வேண்டி நிற்பார்க்கு புகலிடம் ஏது? வெள்ளைத் தாமரை மீதினில் வீற்றிருக்கும் , வேத ஞானம் யாவும் வித்தாய் விளைந்திருக்கும் கலையன்னை - ஞான சரஸ்வதி அன்றோ? இசை மீட்டிடும் அவள் கையில் தான் ஆதார ஸ்ருதி இழைத்திடும் வீணையன்றோ! - அவள் தானே இசை ஞானம் அருளும் வீணா வாணி, நாத ரூபிணீ!

மங்களம் தந்திடும் மலர் மகள், மாதவன் மார்பினில் வாசம் செய்யும் நில மகள் - அவள் அருள் இருந்தால் வறுமை ஏது, வாட்டிடும் பிணிகள் ஏது? துயர் விரட்டிட, தூக்கிய அவள் கைகளைத் நாம் தொழுதிட, வந்து சேராதோ வளம் யாவும்! - அவள்தானே திருவரங்கத்திலேயும் (நமக்கு) பக்கத்திலேயே இருக்கும் ஸ்ரீதேவி!

முப்பெரும் தேவியர் புகழினை இசையால் பாடிப் புகழாதவர் உண்டா? இசைப்பாடல்களிலும் அன்னையர் துதி பாடி ஆராதனை செய்யும் பாடல்கள் இல்லாமல் போகுமா? அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டு பெறுவோமே இசை இன்பம்!

மலைமகள்:
ஜனனி ஜனனி
திரைப்படம் : தாய் மூகாம்பிகை
பாடகர் : இளையராஜா


கலைமகள்:
கை வீணையை
திரைப் படம் : வியட்நாம் காலணி
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ

Kai veenaiyai.mp3


அலைமகள்:
பாடல் : பாக்யதா ஸ்ரீ
பாடகர் : எம்.எல்.வசந்தகுமாரி
Bagyatha Sri.mp3


ஒரே பாட்டில் முப்பெரும் அன்னையரை பாரதி பாடுகிறான் இவ்வாறாக:

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

கலையன்னை:

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே !

அலையன்னை:

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே!

மலையன்னை:

மலையிலே தான்பிறந்தாள். சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையி லுயர்த்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே!

பாடலை எஸ்.சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்:

Maatha Parasakthi-...

Thursday, July 19, 2007

சினிமா காரம் காபி - பாகம் 5

தற்போது இருக்கும் இளம் இசை அமைப்பாளர்களிலேயே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர ராஜா். தன் தந்தையின் நிழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி பெயரை நிலை நிறுத்திக்கொண்டு வருகிறார்.
அவரின் ஆரம்பகால படங்களான துள்ளுவதோ இளமை,நந்தா,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்களிலேயே அவர் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று எனக்கு தோன்றியது. சமீப காலம் வரை அவர் கூட காபி அடிப்பார் என்று எனக்கு தகவல் இல்லாமல் தான் இருந்தது.

இந்த தொடருக்காக சிறிது இணையத்தில் நோண்டி பார்த்த போது தான் இவரும் ஆங்காங்கே சில அட்டை காபிகளை செய்து வருகிறார் என்று தெரிந்து கொண்டேன். அதுவும் அவரின் தந்தையின் இசையமைப்பிலிருந்து அவர் புனைந்த சில இசை அமைப்புகள் பற்றி ஒரு தனி பட்டியலே உண்டு. குறிப்பாக 7G ரெயின்போ காலனியில் வரும் தீம் ம்யூசிக் ஜானி படத்தில் இறுதி காட்சியில் வரும் பிண்ணனி இசையை ஒத்து இருப்பதை பார்க்கலாம். இன்னொரு உதாரணமாக தாஸ் படத்தில் வரும் "வா வா வா,வராங்காட்டி போ போ போ" எனும் பாடல். இந்த பாடல் கேட்கும் போதே இது எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது இது "நீங்கள் கேட்டவை" படத்தில் வரும் அடியே!! மனம் நில்லுனா நிக்காதடி"" பாட்டின் காபி என்று. பாடலின் சில பகுதிகளை உன்னிப்பாக கவனித்தால் எப்படி அவை அச்சு அசலாக ஒத்து போகின்றது என்று பார்க்கலாம்.
ஆனால் நாம் இன்றைக்கு இதை பற்றி பார்க்கப்போகும் உதாரணம் "பாலா" படத்தில் இடம் பெறும் "தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே" எனும் பாடல். இந்த பாடல் இவரின் தந்தை "மஹாதேவ்' எனும் இந்திப்படத்தில் இசையமைத்த "ரிம்ஜிம் ரிம்ஜிம்"(1942 லவ் ஸ்டோரி எனும் படத்தில் வரும் ரிம்ஜிம் பாட்டோடு இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்) எனும் பாடலின் காபி . நீங்களே சற்று கேட்டு பாருங்களேன்.

பாலா - தீண்டித்தீண்டித்தீயை மூட்டுகிறாயே




மஹாதேவ் - ரிம்ஜிம்





ஹ்ம்ம்ம்!!
இப்போ கொஞ்சம் வெளிநாட்டு காபியை பாக்கலாம். "காதல் கொண்டேன்" படம் செல்வராகவன்,தனுஷ்,சோனியா அகர்வால் என்று பல பேருக்கு தமிழ் திரையுலகிற்கு முகவரி அமைத்து கொடுத்த படம். நான் யுவன் சங்கரின் இசைக்கு தீவிர ரசிகனாவதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். திரையில் இடம் பெற்ற பாடல்கள் தவிர "நட்பினிலே நட்பினிலே" போன்ற படத்தில் வெளிவராத சில பாடல்களும் அற்புதமாக அமைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் புகழ் பெற்ற இரு பாடல்கள் அப்படியே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை.
படத்தில் வரும் "மனசு ரெண்டும் பார்க்க" எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை எங்கிருந்து பிடித்திருக்கிறார் யுவன் என்று சற்று பாருங்கள்!! :-)

மனசு ரெண்டும் பார்க்க - காதல் கொண்டேன்



A rose in the wind - Anggun




படத்தில் இன்னொரு பிரபலமான பாட்டு "காதல் காதல் காதலின் நெஞ்சம்" என் தொடங்கும் பாடல். இது எங்கிருந்து எடுத்திருக்கிறார் என்று பார்க்கலாமா??

காதல் காதல் - காதல் கொண்டேன்




Raven - Hedningarna




இது தவிர இந்த படத்தில் வரும் ஒரு அழகான மெலடி "நெஞ்சோடு கலந்திடு" என தொடங்கும் பாடல். இந்த பாடல் Corrs இசைஇக்குழுவின் பாடலான "Runaway" எனும் பாட்டின் தொடக்கத்தின் இன்ஸ்பிரேஷன் என பட்டவர்த்தமாக தெரியும். இது முழுக்க முழுக்க காபி அடிக்கபடவில்லை என்பதால் இதை கூட சற்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த பாடலை பற்றி் நான் என்னுடைய வயலின் பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன்.
நல்ல திறமையான இசையமைப்பாளராக இருந்தாலும் கூட சந்தர்ப்பவசத்தில் இன்ஸ்பயர் ஆகி அல்லது காபி அடிக்க வேண்டி வந்து விடுகிறது என்பதையே இது காட்டுகிறது. :-)

நன்றி:
http://www.itwofs.com/

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP