Tuesday, December 30, 2008

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:

பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

Saturday, December 27, 2008

தமிழிசை வரலாறு - 4 - திருவாசகமும் திருப்புகழும்

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

Thursday, December 25, 2008

தமிழிசை வரலாறு - 3 : பிரபந்தம் & கம்பன்

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை

நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.



அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:



ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)

Monday, December 22, 2008

தமிழிசை வரலாறு - 2 : தேவாரம்

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)

"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Sunday, December 21, 2008

தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;





சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

Tuesday, December 16, 2008

தமிழிசைப் பாவலர் பலர்!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

Sunday, October 12, 2008

தமிழ் மூவர்

மிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் தமிழ் மூவர் பற்றி இங்கே பார்க்கவிருக்கிறோம்.
'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். (இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழ் நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.) தமிழில் கிருதிகளை உருவாக்கிய முன்னோடிகளான இவர்களின் தமிழிசைத் தொண்டு அளவிடற்கரியது.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஈசனே கோடி சூரிய பிரகாசனே - நளினகாந்தி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - மாயாமாளவகௌளை

'ஆடிக்கொண்டார்' பாடலை இங்கு, திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:
MusicIndiaOnline தளச் சுட்டி இங்கே.

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
தரிசித்தளவில் - லதாங்கி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

ருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:

  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

Monday, September 22, 2008

புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!

வெற்றியாளர்கள்: (அனைத்து விடைகளையும் சரியாகச் சொன்னவர்கள்):
1. தியாகராஜன்
2. ஜிரா
3. முகிலரசி-தமிழரசன்
4. ப்ரசன்னா
5. திராச

வென்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு,
ஐயா குன்னக்குடி அவர்களின் இன்னுயிர், அவர் மிகவும் போற்றி வணங்கிய முருகப் பெருமான் திருவடிக் கழல்களில் இளைப்பாறி, காற்சிலம்பு கிண்கிணி கீதமாய் இசைக்க அஞ்சலிகள்!




மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா, மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!
குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!

* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! :)
அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! :)

* அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!
மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!



* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!
வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!

* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!

* தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!

புகழில் சிக்கிய குன்னக்குடி, சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வதில் வல்லவர்!
திரைப்பட நடிகை சுகன்யா-வை வைத்து அவர் ஒரு படம் எடுத்து, அது வெளி வராமலே போனது-ன்னு நினைக்கிறேன்! அதில் சுகன்யா-வை, தியாகராஜ ஆராதனைப் பந்தலில் உட்கார வைத்துத் தனியாக ஒளிப்பதிவு செய்தது, பெரும் கலாட்டா ஆனது! :)

எது எப்படியோ, குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள் தான் இசைக் கலைஞர்களும்! குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் வேண்டும்!
கர்நாடக/தமிழிசைகளை எளிய மக்களும் ரசிக்கச் செய்து, அவற்றை இலக்கண இசையாய் மட்டும் இல்லாமல், மக்கள் இசையாக்கிய மாபெரும் கலைஞரை, வணங்கி மகிழ்வோம்!

சென்னை புரசைவாக்கத்தில், எங்கள் தெருவில், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அவர் வாசித்த போது,
சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் வயலினில் விரலை வளைத்தே கொடுத்த அட்டகாசம் இன்றும் என் நினைவில் இருக்கு!

அவர் மறைந்த போது, இசை இன்பம் வலைப்பூவில் அஞ்சலிப் பதிவு ஒன்று இட எண்ணி இருந்தேன். வேறு பல காரணங்களால் இட முடியாமற் போனது. அதான் இப்போ இந்தப் புதிரா புனிதமா? பார்க்கலாம், தமிழ் சினிமா ரசிகர்கள், குன்னக்குடியை எத்தனை தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று!

ஓவர் டு குன்னக்குடி! விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!




1

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்துக்கு, குன்னக்குடி தான் இசை.

படத்தில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேலி பேசும் நவநாகரீகப் பெண்மணிகளுக்குப் போட்டியாகச் சில தியாகராஜ கீர்த்தனைகளை மேற்கத்திய இசையில் பாடுவார் எம்.ஜி.ஆர்! :))

ட்யூன் போட்டது சாட்சாத் நம்ம குன்னக்குடி தான்! என்ன படம்? - சாரி, நோ சாய்ஸ்! :)

1

நவரத்தினம்

எம்.ஜி.ஆர்-உடன், ஒன்பது கதாநாயகிகள்-ன்னு நினைக்கிறேன்! லதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஜரீனா வகாப் -ன்னு பட்டாளம்! பின்னூட்டத்தில் மற்ற தகவல்களைச் சொல்கிறேன்!

2

கொட்டாம் பட்டி ரோட்டிலே, குட்டி போற ஷோக்கிலே, நான் ரொட்டியைத் தான் தின்பேனா? குட்டியைத் தான் பார்ப்பேனா-ன்னு ஒரு சரி குத்துப் பாட்டைப் போட்டாரு குன்னக்குடி! வழக்கம் போல பயங்கர எதிர்ப்பு! :)

அதுவும் ஒரு இசைக் கலைஞரைக் கதாநாயகனாகக் காட்டும் படம்! என்ன படம்?

2

அ) வா ராஜா வா

ஆ) தோடி ராகம்

இ) உன்னால் முடியும் தம்பி

ஈ) சிந்து பைரவி

3

திருப்பதி மலை வாழும் வேங்கடேசா - சீர்காழி பாட, குன்னக்குடி இசையமைத்த பாட்டு! திருமலை தென்குமரி என்னும் படத்தில்!

பாட்டுக்காக கோயில் மணிகளை ஸ்டூடியோ முழுக்க அதிர விடுவாராம் குன்னக்குடி! நடு நடுவில் சுலோகங்களை வயலினில் வாசித்துக் காட்ட, உடனுக்குடன் சீர்காழி பாடினாராம்!

என்ன சுலோகத்தை வாசித்துக் காட்டினார்?

3

அ) பல்லாண்டு-பல்லாண்டு

ஆ) புருஷ சூக்தம்

இ) சுப்ரபாதம்

ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்

4

மருதமலை மாமணியே முருகய்யா! - இதுக்கும் குன்னக்குடி தான் இசை! மெட்டுக்குப் பாட்டு எழுதாத கவிஞர் ஒருவர், குன்னக்குடி வயலினில் போட்டார் என்பதற்காகவே, மெட்டு போட்ட அடுத்த நிமிஷம், சுடச்சுட பாட்டும் எழுதிக் கொடுத்தாராம்!

தத்தித் தரிகட, தத்தித் தரிகிட தோம் தோம் - சத்தித் திருமகன், முத்துக் குமரனை மற வேன்! யான் மறவேன்! - யார் அந்தக் கவிஞர்?

4

அ) வாலி

ஆ) கண்ணதாசன்

இ) பூவை செங்குட்டுவன்

ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்

5

சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது!

அவர் வாசிச்ச மழை தருவிக்கும் ராகத்தின் பெயர் என்ன?

5

அ) கல்யாணி

ஆ) மேக சந்தேசம்

இ) சங்கராபரணம்

ஈ) அம்ருத வர்ஷிணி

6

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்! - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்!

கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க!

இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்!

சினிமாவில் பாட்டைப் பாடிய வள்ளி-தேவயானை ஜோடி யார்?

6

அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி

ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா

இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி

ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்

7அந்நியன் படத்தில், குன்னக்குடி ஒரு சீனில் தோன்றுவார்! எந்த சீன்? 7

அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன்

ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன்

இ) திருவையாறு ஆராதனை சீன்

ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்!

8

COLORS என்ற ஒரு ஆல்பம்! இதில் வயலின்-தபேலா என்று ஒரு Fusion! (தொகுப்பிசை).

குன்னக்குடியும், ஜாஹீர் உசேனும் செய்த இந்த ஆல்பத்துக்கு, கீ-போர்ட் வாசித்த பிரபலம் யார்? அவர் அப்போதைய பெயர் என்ன? - சாரி நோ சாய்ஸ்! :)

8

இன்றைய ஏ.ஆர்.ரகுமான்

அன்றைய திலீப் குமார்

9குன்னக்குடி தானே "கண்டுபிடிச்ச" ராகத்தின் பெயர் என்ன? :)

9

அ) மஹதி

ஆ) ராமச்சந்திரிகா

இ) ஜெயலலிதா

ஈ) இளையராகம்

10

சினிமாவில் பாடகர்கள் முகம் காட்டுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான்! குன்னக்குடி, தான் இசையமைத்த பல படங்களில், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாது, தன் அணியினரையும் முன்னிறுத்துவார்! புகழ்ச்சி விரும்பி என்று அவரைப் பல பேர் சொன்னாலும், அவரின் இந்த நல்ல முகத்தை மட்டும் பார்க்க அவர்கள் மறந்து விடுகின்றனர்!

பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, டி.எம்.எஸ், ரமணி அம்மாள், மதுரை சோமு என்று குன்னக்குடி இசையில் பாடிய அத்தனை பேரும் முகம் காட்டிய திரைப்படம் எது?

10

அ) கந்தன் கருணை

ஆ) தெய்வம்

இ) அகத்தியர்

ஈ) ராஜ ராஜ சோழன்



மருதமலை மாமணியே முருகய்யா, வயலினில்!



ஒட்டகத்தைக் கட்டிக்கோ, வயலினில்!

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) வா ராஜா வா ஆ) தோடி ராகம் இ) உன்னால் முடியும் தம்பி ஈ) சிந்து பைரவி

3 அ) பல்லாண்டு-பல்லாண்டு ஆ) புருஷ சூக்தம் இ) சுப்ரபாதம் ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்
4 அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) பூவை செங்குட்டுவன் ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்
5 அ) கல்யாணி ஆ) மேக சந்தேசம் இ) சங்கராபரணம் ஈ) அம்ருத வர்ஷிணி
6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்
7 அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன் ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன் இ) திருவையாறு ஆராதனை சீன் ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்!
8
9 அ) மஹதி ஆ) ராமச்சந்திரிகா இ) ஜெயலலிதா ஈ) இளையராகம்
10 அ) கந்தன் கருணை ஆ) தெய்வம் இ) அகத்தியர் ஈ) ராஜ ராஜ சோழன்

Wednesday, July 23, 2008

அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!


ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.

தாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.

என்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.

அதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.
அத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.

அவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.

பெயரைச் சொல்லிப் பார்த்தாலே,
நாவில் தேன் சொட்டி,
ஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.

ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,
உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.
"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?
நீ லவ் பண்ற ஆண்ட்டியா?"

வெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,
அப்போதுதான் உறைத்தது.

அந்த சமயம், "சின்னக் குஷ்பூ" என்றழைக்கப்பட்ட, "சிவரஞ்சனி" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.

இது அவரல்ல என்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.

சரி! என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

மொத்தம் ஐந்தே ஸ்வரங்கள்தான்.

//ஷட்ஜமம், "ஸ"
சதுஸ்ருதி ரிஷபம், "ரி1"
சாதாரண காந்தாரம், "க"
பஞ்சமம், "ப"
சதுஸ்ருதி தைவதம். "த"//

ஸ, ரி, க, ப, த, ஸ
ஸ, த, ப, க, ரி, ஸ

சோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.

முன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.

ஐயோ! அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....

சர்வாலங்காரத்துடன், ஜெக, ஜெகவென்று....

கண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...
என்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.

என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.

நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,
"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று
இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.

சந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,
என்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.

இப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...

ஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா
கேட்டார்.
"என்னப்பா! 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு?"

அவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.

ஆம்....
என்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.

அதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.

பி. சுசீலாவின் குரலில்...
ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.

கேட்டுப் பாருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அடுத்தது "நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்."

எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது
அம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அடுத்து, "மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை"
பாடலும் அப்படியே...

அவளுடைய தனித்தன்மையே இதுதான்.
தார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,
மந்திர அதி மந்திர என்று வெகு வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்


"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.
அப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

அதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.
அப்போது, "சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்," வெளிப்படும் பாருங்கள்...
Get this widget | Track details | eSnips Social DNA

பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைத்த "என் ராசாவின் மனசிலே" படத்தில் "குயில் பாட்டு" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.

அதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.

ஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.

இவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம்.

குயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.

அதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.

ஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.

நினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

இத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...

இல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...

சில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு...

அவளுடன் பேசாதிருந்தேன்.

தொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...

இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.

பார்க்கலாம்.

+ve பதிவர் அந்தோணி வருகவே! ராஜாவின் ராஜாங்கம் தருகவே!

பதிவர் அந்தோணிமுத்துவை நம்மில் பலரும் அறிவோம் இல்லையா? Positive அந்தோணி என்றால் அவர் தான்! எழுந்து நிற்க இயலாவிடினும், உலகத்தின் முன் எழுந்து நின்றவர்! தான் யார் என்பதைச் சொல்லி வென்றவர்! ஆனந்த விகடன், ஆறாம் திணை, நிலாச் சாரல் என்று வளைய வந்தவர்!
மதிப்பிடமுடியாத அளவுக்கு தன்னம்பிக்கை வரம் கைக்கொண்ட இளைஞர்! நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இருந்தால், ஊனங்கள் ஓடியே ஒளியும்! உற்சாகம் தேடியே வருகும்! = இதை நம் அனைவருக்காகவும் இன்னொரு முறை மெய்ப்பிக்க வந்தவர் தான் அந்தோணி!
* அவர் எழுந்து நின்ற கதை இங்கே!
** அவர் வென்ற முதல் பரிசு இங்கே!

வெற்றியைப் படித்தல் பல நோய்களுக்கு நல்ல மருந்து! வெற்றிக் கதையைத் தந்த அந்தோணி அண்ணனும் ஒரு மருத்துவர் தான்!
அவர் கதையைப் படித்துப் பாருங்கள்! பிடித்துப் போகும்!

அந்தோணியிடம் ஒரு பெரிய புதையல் இருக்காம்! இந்த முறை சென்னை சென்றிருந்த போது (April-2008), அந்தோணி வீட்டுக்கு, நானும் மதுமிதா அக்காவும் சென்றிருந்தோம்! செம உபசரிப்பு!
அப்போ அவர் பாதுகாத்து வந்த புதையல் என் கண்ணில் பட்டு விட்டது!
அந்தப் புதையலை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை மதுமிதா அக்காவுக்கு!

ராகங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்! ராகதேவன் இளையராஜாவின் இசையில் குறுக்குச் சந்துகளும் நெடுக்குச் சாலைகளுமாய் பைக் ஓட்டுகிறார்! உச்சி வகிந்தெடுத்து, பிச்சிப்பூ வச்ச கிளி-ன்னு ஒரு பாட்டை வேறு விதமான ராக ஆலாபனையுடன் எடுத்து விட்டார் பாருங்க!
அவருடன் மதுமிதா அக்காவும் நானும் கூட ஈடு கொடுக்க முடியாமல் பாடினோம்!

அன்தோணி அண்ணன் வீட்டுச் சுண்டைக்காயும் செம்பருத்தியும் கூட இசை பாடும்!

இசை இன்பம் குழு வலைப்பூவுக்குப் பிச்சிப்பூ வைத்திட, அவர் புதையலை அங்கேயே அபேஸ் பண்ண அக்காவும் அடியேனும் கூட்டுச் சதி செய்து விட்டோம்!
இதோ, அந்தோணி அண்ணன் இசை இன்பத்தில் உலா வரத் தொடங்கி விட்டார்!

அவர் முதல் காதலி பேரு ரஞ்சனி!
அந்த முதல் காதலைச் சொல்லப் போறாரு!
கதை கேளு கதை கேளு!
இசை கேளு இசை கேளு!....
பாசிடிவ் அந்தோணியின் இசையை நல்லா கேளு...


இசை இன்பம் வலைப்பூவில் சினிமா-காரம்-காபி, வாத்தியக் கருவிகள், அன்னமாச்சர்யர் கீர்த்தனை என்று பல அருமையான பதிவுகளைப் பதிந்த நண்பர் CVR-க்கு இன்று (Jul-24) பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீவி! :)

Monday, July 14, 2008

பிரம்மத்தை தேடுவதெங்கணம்.

இப்பெரும் கேள்விக்கு விடைகாண இந்த ஜென்மம் போதுமோ, இல்லை நம்மாழ்வார்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற

காவிமலரென்றும் காண்தோறும் பாவியேன்

மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை

எல்லாம் பிரான் உருவே என்று

(பூவைப்பூ, காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர்ப்பூ, ஆகிய மலர்களைக் காணும்பொழுது அவை பெருமான் திருவடிவை நினைவு படுத்துகின்ரன். அவற்றை அவன் வடிவமாகவே எண்ணி பேறுடைய அடியேனின் உயிரும் உடம்பும் பூரித்துப்போகின்றன) என்றுணர்ந்து

கூறியதுபோல் நம்மால் உணர்ந்து கூறத்தான் முடியுமோ.

இந்த கலியுகத்தில் நாம் நம்மாழ்வாரும் அல்ல, நால் வகை வேதங்கள் காட்டும் வழிச்சென்றடையும் ஸ்ததியுள்ளோரும் அல்ல பின் உய்யும் வழி எதென்று அலைபாயும் அனைவருக்கும் உபாயத்தை காட்டித்தருவது ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் வரிகள். காணும் பொருள்களிலெல்லாம் கண்ணனை, அந்த பிரம்ம ரூபத்தை காண்பது தானே உண்மையான உணர்தலாய் இருக்க முடியும். அது நீலக்கடலோ, நீள் வானமோ, இல்லை பாடித்திரியும் குயிலோ, கதிரோ, மதியோ அனைத்தும் நீயென சொல்லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது கூட பிரம்மத்தை உணரும் வழியாகக்கொள்ளலாம் என்றால் மிகையாகதன்றோ.

பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே - கண்ணா

(பால் வடியும்)

நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய

(பால் வடியும்)

வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் காணுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் உன்
கானக்குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகினை இறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரிள ம் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை

(பால் வடியும்)




paalvadiyummugam.m...

Friday, July 11, 2008

உளியின் ஓசை - ராஜாவின் ஓசை

இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் 'உளியின் ஓசை' படத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் துவக்கத்தில் இளையராஜா, கவிதை நடையில் என்ன சொல்லுகிறார்?

நான் ஒரு சிற்பி, நடனக்கலை தெரிய தேவையில்லை.
இருப்பினும் உனக்கதை விளக்கிடவே...

முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரியாவிரை, யாழ்நூல், பஞ்சமரபு
இவை இசை கூறும்.

செயிற்றியம், கூத்தநூல்
நடன கலை வகை கூறும்.

பல தொன்நூல்கள் கூறும்
தோற்கருவி, முழவு, முரசு, உடுக்கை,
மிருதங்க தாள மேளம் ஆகும்.

துளைக்கருவி, புல்லாங்குழலொடு,
மரக்கிளை ஒடித்து மனைத்து சீவாளி பொருந்தும் முகவீணை,
திமிரி நாயனம் நாதஸ்வரமாகும்.
நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ்,
ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்,
சாரங்கியொடு
என்றும் நிறை வீணையாகும்.

மிடற்றுக்கருவி குரல் ஆகும்,
பண்பட்டு பண்பாடும் குரல் வகையாகும்.

இத்தனையும் ஒருங்கிணைந்து
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
ஏழிசை எழும்ப தாளம் தவறாமல், இசைந்தாடும் நடனக் கலைதனில்
எத்தனை பாவமுண்டு நடனத்திலே!!!

குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இராகம்: மாயாமாளவகௌளை & (???நீங்களே சொல்லுங்க!)
பாவாசிரியர்: நா.முத்துலிங்கம்

அகந்தையில்...


"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே"

- கூத்த நூல்

இசை நூல்கள், இசைக் கருவிகள் பெயரெல்லாம் வருவது போலுளதே? எத்தனையோ காலம் முன்னரே நம் மரபில் திளைத்திட்ட இந்த இசை நயங்களை, இப்போது நினைவில் திருப்பிட, இவையெல்லாம் என்னவென்று விளக்கும் சுட்டிகளையும் இயன்றவரை இணைத்திருக்கிறேன்:

* தமிழ்ச்சங்கங்கள்
* இசைத்தமிழ்
* சுவாமி விபுலானந்தர் - யாழ்நூல்
* நாடகத்தமிழ்
* முரசும் அரசும்
* ஒரு நாகசுரம் உருவாகிறது
* துளைக்கருவிகள்
* விக்கியில் யாழ்
* இசை இன்பம் - சாரங்கி
* வைகோ இசை உரை
* விக்கியில் பஞ்சமரபு
* இசையின் கருவரைகள்

Monday, July 07, 2008

கை தொழுது கர்ம வினையும் மன்றாடுமா ???

கபீரன்பன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்திருந்த பின்னூட்டத்தின் மறுமொழியாக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.அவர் விருப்பத்திற்கு இணங்க இந்தப்பதிவு எல்லா இசை பிரியர்களுக்குமாக சமர்ப்பணம்.


+++++

http://kabeeran.blogspot.com/2008/06/blog-post_28.html

வருக கிருத்திகா,

//"கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு... //

கர்மவினைகள் மன்றாடுகின்றனவா ?! ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் இந்த பாடலை கேட்டதில்லை.

முழுபாடலையும் உங்கள் பதிவாக போட்டுவிடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.
நன்றி

+++++++

பாடல் வரிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)

நீங்காத மணிநாதம் வேணுகாணம் காதில்

வழிந்தோடும் செந்தேன் அருவிபோலே (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே.

திருக்கோவில் முற்றமதில்

தாமரை மலர் மொட்டுபோல் உனது காலடிகள் (2)

அவிமலர் இதழ் மீது வெண் பனித்துளியாக

ஆழ்வார்கள் பாசுர தேனடிகள்

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே

காதல் மீதெழெ கண்ணனைச்சுற்றியே

களிப்புடன் மேய்ந்திடும் மோகங்களே (2)

கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும்

கைவிடாதே கண்ணா என்று சொல்லும் (2)

அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்

ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே (2)


இந்தப்பாடலை கே.ஜே.ஏஸ் தன் கம்பீரமான குரலில் பாடும்போது "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"


azagarmalayil.mp3

Thursday, July 03, 2008

இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் "பல்கலைச் செம்மல்" எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் - விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது 'முருகா, முருகா' பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)

வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.
எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், 'இசைப் பேரறிஞர்' பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், 'கலைமாமணி' பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! "தமிழ் கலைக் களஞ்சியம்" என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் 'பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு' என்கிற தலைப்பில்! "கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து" எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
Thooran_Keerthanigal
Thooran_Keerthanig...
Hosted by eSnips


தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்...


எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு 'கறை மிடறு அண்ணல்' என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட 'விடமுண்-கண்டனை' நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:
* தூரன் வாழ்க்கைக்குறிப்புகள்
* தென்றல் இதழில் திரு.மதுசூதனன்
* சென்னை ஆன்லைன் தளம்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP